சென்னை: ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மற்றும் பயோமெட்ரிக் முறை கட்டாயம் கிடையாது என்ற போதும், குழப்பம் ஏற்படாத வகையில் எளிமையாகச் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டையில் இருந்த அரிசி தரமானதா என்றும், பாமாயில் வைக்கப்பட்டுள்ள அட்டை பெட்டியில் கசிவுகள் ஏற்பட்டுள்ளதா என்றும் பரிசோதனையில் ஈடுபட்டார். அமைச்சருடன் உயர் அதிகாரிகளும் சென்று உணவுப் பொருட்களை பாதுகாத்து வரும் நடவடிக்கை பற்றி எடுத்து கூறினார்கள்.