நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் முன்பெல்லாம் மரக்செக்குகளில் தேங்காய், எள், நிலக்கடலை, வேப்பவிதை, புன்னைவிதை உள்ளிட்ட பொருட்களை கொண்டு எண்ணெய் தயாரிக்கும் தொழில் சிறப்பாக நடந்து வந்தது. நாளடைவில் இந்த தொழில் நலிவடைந்தது. அதன்பிறகு மரச்செக்கு எண்ணெய்களை மக்கள் அதிக அளவு விரும்புவதையடுத்து, குமரியில் பலர் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர்.
ஆனால் வேப்பெண்ணெய் உற்பத்திச்செய்யும் மரச்செக்குகள் பல மூடப்பட்டுள்ளன. தற்போது குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளத்தில் 2 இடங்களிலும், பருத்திவிளையில் ஒரு இடத்திலும் வேப்ெபண்ணெய் தயாரிக்கும் மரச்செக்கு உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் ₹300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வேப்பெண்ணெய் தயாரிக்கும் மரச்செக்கு உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் மரச்செக்குகள் கொண்டு எண்ணெய் தயாரிக்கப்பட்டது. பாக்கெட்களில் அடைக்கப்பட்ட எண்ணெய் விற்பனைக்கு வந்த பிறகு பின்பு மரச்செக்கு தொழில் நலிவடைந்தது. தற்போது வேப்பெண்ணெய் தயாரிக்கும் மரச்செக்குகள் 3 இடங்களில் மட்டுமே உள்ளன. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலைஎண்ணெய் மரச்செக்குகள் மூலம் உற்பத்தி செய்யும் தொழில் குமரி மாவட்டத்தில் தற்போது சிறப்பாக நடந்து வருகிறது.