இம்பால்: வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி 23-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கனமழையால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. முக்கிய நதியான பிரம்மபுத்ராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருப்பதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அசாமில் மட்டும் மழை வெள்ளத்திற்கு 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மணிப்பூரில் கன மழை, வெள்ளத்திற்கு பலா் உயிரிழந்துள்ளனர். ஹோஜய், கர்பி, மேற்கு அங்லாங்க், கோலாகட் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இம்மாவட்டங்களிலுள்ள 673 கிராமங்களில், ஆயிரத்து 512 ஹெக்டேர் பரப்பில் விளை நிலங்கள் வெள்ளத்தில் முழ்கி சேதமடைந்துள்ளன. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி மாண்டுள்ளன.