சூலூர் : கடந்த 6 மாதங்களில் பெண்களின் சேமிப்பு கணக்கில் ரூ100 கோடிக்கு பரிமாற்றம் நடந்தது குறித்து, மகளிர் சுயஉதவி குழுவினர், சி.பி.ஐ. மற்றும் ரிசர்வ் வங்கியில் புகார் அளிக்க உள்ளனர். கோவை அவிநாசி ரோடு, நீலாம்பூரில் கனரா வங்கி கிளையில் உள்ளது. இங்கு மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 750 பெண்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது வங்கியில் ரூ50 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை கடன் பெற்று தவணை முறையில் கடனை திரும்ப செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பெண்களின் பாஸ்புக்கில் இருப்பு தொகை அச்சிட்டு தரப்படவில்லை. இதையடுத்து, அனைத்து பாஸ் புத்தகங்களையும் எடுத்து சென்று ஓராண்டுக்கு வரவு, செலவுகளை பதிவு செய்து தரும்படி வற்புறுத்தினர். அதன்பிறகு, பாஸ் புத்தகத்தில் பணம் போட்டது, எடுத்தது போன்ற விபரங்கள் பதிவு செய்து தரப்பட்டது. அதைவாங்கி பார்த்த போது கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஒவ்வொருவரது கணக்கிலும் குறைந்தபட்சம் ரூ5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ20 லட்சம் வரை செலுத்தப்பட்டது தெரியவந்தது.