சமயபுரம்: சமயபுரத்தில் மதம் பிடித்து அட்டகாசம் செய்து வந்த யானை மசினி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மசினி யானை தனது பாகனான கஜேந்திரனை மிதித்து கொன்று விட்டது. இதனையடுத்து பயிற்சி பெற்ற பாகன்கள் 6 பேர் இணைந்து யானைக்கு உத்தரவிட்டு அதனை தற்போது கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். ஜெயா என்ற யானை வரவழைக்கப்பட்டு, மதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை மசினி கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.மதம் பிடித்ததையடுத்து சமயபுரம் கோயிலில் இருந்து யானை மசினி வேறு இடம் மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக யானை மசினி தாக்கியதில் பாகனான கஜேந்திரன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். திடீரென யானைக்கு மதம் பிடித்து தாக்க துவங்கியதில் கோயிலுக்கு வந்த பக்தர்களில் பலர் காயமடைந்துள்ளனர். யானை விரட்டியதில் தடுமாறி விழுந்த பக்தர்கள் பலர் காயமடைந்துள்ளனர். வெள்ளிகிழமை என்பதால் சமயபுரம் அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மதம் கொண்ட யானையின் பெயர் மசினி. மசினி தொடர்ந்து மக்களை விரட்டி தாக்கி வந்தது. பாகனையே யானை கொன்று விட்டதால், அதனை அடக்க ஆளில்லாமல் சிக்கல் ஏற்பட்டது. எனவே யானையை அடக்கும் பயிற்சி பெற்றவர்கள் சமயபுரத்திற்கு விரைந்தனர். இதனிடையே யானை தாக்கி பாகன் பலியானதை அடுத்து சமயபுரம் கோயில் நடை அடைக்கப்பட்டது.