கோவை: குட்கா தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக, அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கோவை கண்ணம்பாளையத்தில் 5 ஆண்டாக இயங்கிய குட்கா தொழிற்சாலைக்கு விதிமுறை மீறி மின் இணைப்பும், சொத்து, தொழில் வரி விதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. விவசாய தோட்டத்துக்குள் ரகசியமாக இயங்கிய இந்த தொழிற்சாலை குறித்த விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை. உணவு பாதுகாப்பு துறையினருக்கு இந்த தொழிற்சாலை இயங்கியது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்காமல் விட்டார்கள் என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதேபோல் சொத்து, தொழில் வரி விதித்த கண்ணம்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினரும் இந்த தொழிற்சாலையின் செயல்பாட்டை 5 ஆண்டாக கண்டுகொள்ளாமல் விட்டது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மின்வாரியத்தினர் சொத்து, தொழில் வரி செலுத்தியதால் மின் இணைப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வகை தொழிற்சாலைக அதிக பாதிப்பு ஏற்படுத்தும் ஆரஞ்ச் வகை தொழிற்சாலை பிரிவில் இடம் பெற்றுள்ளது. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சுவாச நோய் ஏற்படுத்தும் நிலையிருப்பதால் இதுபோன்ற தொழிற்சாலைக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதி வழங்குவதே இல்லை. ஆனால் முறைகேடாக இயங்க அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் மாசு கட்டுபாட்டு வாரிய (கோவை தெற்கு) பொறியாளர்களிடம் விசாரித்தனர். பேரூராட்சி அலுவலகத்தில் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கி வரி விதித்த செயல் அலுவலர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. . குட்கா தொழிற்சாலையில் அரசியல்வாதிகள் சிலர் பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலாளரின் செல்போன் தொடர்பில் சில அரசியல்வாதிகள் இருந்துள்ளனர். இது போலீசாருக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்ககாமல்அவர்களது தொடர்பை மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது தொழிற்சாலை உரிமையாளர் அமித்ஜெயின் சிக்கினால் அதிர்ச்சி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.