ஈரோட்டில் உரிமம் இன்றி இயங்கியதாக புகார்: தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சத்தி சாலையில் தனியார் மகளிர் மருத்துவமனை மற்றும் செயற்கை கருத்தரித்தல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டர் உரிமம் இன்றி இயங்கி வருவதாக ஈரோடு கலெக்டர் தலைமையிலான மருத்துவ கண்காணிப்பு குழுவிற்கு புகார் வந்தது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் நேற்று தனியார் மருத்துவமனை, கருத்தரித்தல் மையம், ஸ்கேன் சென்டரில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, புகார் வந்த தேதியில் ஸ்கேன் சென்டருக்கு எவ்வித அனுமதியும், உரிமமும் பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஸ்கேன் இயந்திரத்திற்கும், ஸ்கேன் சென்டருக்கும் சீல் வைத்தனர். மேலும், அனுமதி இல்லாமல் ஸ்கேன் சென்டரை இயக்கியது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் நோட்டீஸ் வழங்கினர். இந்த தனியார் மருத்துவமனையின் கிளைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களிலும், வங்கதேசம், இலங்கை, மொரிசியஸ் என வெளிநாடுகளிலும் கிளைகளுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது….

The post ஈரோட்டில் உரிமம் இன்றி இயங்கியதாக புகார்: தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: