
சென்னை: ‘ஹபீபி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் ஈசா அவரது திரைப்பயணம், வெற்றி மற்றும் எதிர்காலம் குறித்து பேசுகையில், ‘திரைப்படம் எப்படி உருவாகிறது, காட்சியை எப்படி வடிவமைக்கிறார்கள், நடிகர்களிடமிருந்து இயக்குனர் எப்படி நடிப்பை வாங்குகிறார் என்பதை ‘ஹபீபி’ படத்தில் நடித்த போது நேரடியாக கற்றுக்கொண்டேன். இப்படம் மூலம் எனக்கு கிடைத்த அனைத்து அங்கீகாரம், பாராட்டுகள், புகழுக்கு முழு சொந்தக்காரர் இயக்குனர் மீரா கதிரவன்தான். என்னுள் இருந்த திறமையை வெளிக்கொண்டு வந்தவர் அவர்தான்.
இன்றைய சூழலில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பு உரிய ஆதரவு கிடைப்பதில்லை. அந்த நிலை மாறினால் இன்னும் பல தரமான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும். நடிகராக மட்டுமல்ல, ஒரு விளையாட்டு வீரராகவும் தொடர்ந்து அறியப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். நல்ல கதைகள், நல்ல கதாபாத்திரங்கள், நல்ல சினிமா, அதுவே என் அடுத்த இலக்கு’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.

