பெரம்பூரில் வசிக்கும் இந்து தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த பாரி இளவழகன், ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ரம்யா ரங்கநாதனை காதலிக்கிறார். இந்த காதலுக்கு மதம், கலாசாரம் தடையாக நிற்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. ‘ஜமா’ பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ளார். கோச் வேடத்தில் சென்னை தமிழ் பேசி ஸ்கோர் செய்துள்ளார். இயல்பான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார். ரீ-என்ட்ரியான ரோஜாவுக்கு இது வெயிட்டான கேரக்டர்.
அதை உணர்ந்து கெத்தாக நடித்து, தெலுங்கு கலந்த தமிழில் டப்பிங் பேசி அசத்தியுள்ளார். ரம்யா ரங்கநாதன் ‘ஜூனியர் நயன்தாரா’ மாதிரி இருக்கிறார். நடிப்பிலும், ஸ்டைலிலும் பளிச்சிடுகிறார். அனைவரையும் நடிப்பில் ஓரங்கட்டிய சேத்தன், மனைவியிடம் எகிறும் காட்சிகள், ஒரு சோறு பதம். பெங்களூருவாசியாக காமெடியில் ‘பரிதாபங்கள்’ கோபி ரகளை செய்துள்ளார்.
இஸ்மத் பானு, செல் முருகன், ஆட்டிசம் பாதித்த சிறுமி, நிகிலா சங்கர் யதார்த்தமாக நடித்துள்ளனர். பெரம்பூரின் அடையாளங்களை இயல்பாக பதிவு செய்துள்ளார், ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட். பரத் சங்கரின் பாடல்களும், பின்னணி இசையும் துள்ளலாக இருக்கிறது. ‘பெத்தவங்களை புரிஞ்சிக்கிற பசங்களை, பெத்தவங்களும் நல்லா புரிஞ்சி நடந்துக்கணும்’ என்ற மெசேஜை ஜனரஞ்சகமாக சொன்ன இயக்குனர் பாரி இளவழகன், காட்சிகளில் கூடுதல் அழுத்தத்தை கொடுத்திருந்தால், அன்பு இன்னும் பலமாக இருந்திருக்கும்.
