
சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் முதல்முறையாக இணையும் படத்துக்கு ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்: காளமாடன்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, எழுதி இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் மூலமாக, இசையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாழை’ என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் வழங்க, ஃபார்ச்சூன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுஷாந்த் பிரசாத் இணை தயாரிப்பு செய்கிறார். அதேவேளையில், ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பிரமாண்டமான வரலாற்று படத்தின் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
ஏற்கனவே ‘மாமன்னன்’ என்ற வெற்றிப் படத்தில் அவருடன் இணைந்து மாரி செல்வராஜ் பணியாற்றியுள்ளார். தனுஷுடன் மாரி செல்வராஜ் பணியாற்றும் படத்துக்கான விரிவான வரலாற்று ஆய்வுகள், பிரமாண்டமான முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருவதால், தற்போது கிடைத்துள்ள இடைவெளியில் ‘மஞ்சணத்தி’ படத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண் மணம் வீசும் வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகிறது.

