சென்னை: திரைப்படங்களுக்கான தணிக்கையில் சில புதிய விதிகளை 2024ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. அதில் காது கேளாதோர் படங்களை பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் சப்டைட்டிலும் பார்வையற்றோர் படத்தை புரிந்துகொள்ளும் வகையில் ஆடியோ வடிவில் காட்சிகளை விவரிப்பது ஆகிய அம்சங்களை சேர்ந்திருந்தது. தற்போது 2 வருடங்களுக்கு பிறகு, அந்த அம்சங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி முதல் வெளியாகும் புதிய படங்கள் இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது. இனி புதிய படங்களை தணிக்கைக்கு சமர்ப்பிக்கும்போது சப்டைட்டில், ஒலி வடிவம் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்பினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சப் டைட்டில், ஒலி வடிவம் ஆகியவற்றுடன் படத்தை பார்த்தால் அது சினிமா பார்க்கும் அனுபவத்திற்கு இடையூறாக இருக்கும் என சிலரும், அதை வரவேற்று சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேவைப்படுபவர்களுக்கு மட்டும் இந்த வசதிகளுடன் படத்தை பார்க்கும் அனுபவத்தை வழங்கலாம் என்பதும் மற்றொறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
