சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது பாலிவுட் சினிமா துறை மதச்சார்பு உடையதாக மாறிவிட்டது என கூறி இருந்தார். மேலும் கடந்த 8 ஆண்டுகளில் நடந்த அதிகார மாற்றத்தால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது எனவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். அவர் கூறியது சர்ச்சை ஆன நிலையில் பாலிவுட் துறையினர் பலரும் ரஹ்மானை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அதற்கு பதில் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘‘யாரையும் புண்படுத்த வேண்டும் என நினைக்கவில்லை. நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்’’ என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வரும் எதிர்ப்பு பற்றி அவரது மகள் கதிஜா இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தான் உணர்ந்த ஒரு விஷயத்தை அவர் பேசி இருக்கிறார். அது அவரது உரிமை. உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம், ஆனால் அவர் பேசவே கூடாது என அவரது உரிமையை மறுக்க கூடாது. இது abuse மற்றும் character assasination வரை சென்று இருக்கிறது. உலக அளவில் மதிக்கப்படும் ஒரு ஆர்ட்டிஸ்ட்டை அவமானம் என சொல்வது, நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவது எல்லாம் விமர்சனம் அல்ல. இதெல்லாம் வெறுப்பு பேச்சு” என கதிஜா காட்டமாக பதிவிட்டு இருக்கிறார். மேலும் ரஹ்மான் குடியரசு தலைவர் உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு இந்திய கொடியையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
