×

ரூ.15 கோடி நஷ்டம்: சிம்பு ஏமாற்றிவிட்டார் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தால் ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு பதிலாக புதிய படத்தில் இலவசமாக நடித்து கொடுக்கிறேன் என கூறி நடிகர் சிம்பு ஏமாற்றிவிட்டார் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் கூறினார். இது குறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது: டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் இருவரும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் என்னை பற்றி புகார் கூறினார்கள். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு சம்பளத்தை விட்டுகொடுத்ததாக சொன்னார்கள். சிம்புவுக்கு நான் சம்பளம் பாக்கி வைக்கவில்லை. முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டேன். சிம்புவால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் பலமுறை பிரச்னைகள் ஏற்பட்டது. அது பலருக்கும் தெரியும்.

பாங்காக்கில் ஷூட்டிங் வைத்துவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவும் காத்திருந்தபோது, சிம்பு மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை. ஒரு கட்டத்தில் இந்த படத்தையே கைவிட்டு விடுவோம் என்றார். நான் மறுத்தேன். இந்த படம் ஒருவேளை வெளியாகி, நஷ்டம் ஏற்பட்டால் அது என் பொறுப்பு. உங்களுக்கு அடுத்த படத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என சிம்பு சொன்னார். படம் ரிலீசாகி பெரும் தோல்வியை சந்தித்தது. இது தொடர்பாக அப்போதே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். இப்போது புதிய நிர்வாகிகளிடமும் புகார் அளித்துள்ளேன். சொன்னபடி சிம்பு எனக்காக படம் நடித்து தரவில்லை. அவர் ஏமாற்றிவிட்டதை அறிந்த பிறகே அவர் மீது போலீஸ் கமிஷனர் ஆபீசிலும் நேற்று புகார் அளித்தேன். இந்த படத்தால் ரூ.15 கோடி நஷ்டம். வினியோகஸ்தர்களுக்கு ரூ.12 கோடி தர வேண்டும். எனவே வாக்குறுதி தந்தபடி என் படத்தில் சிம்பு சம்பளம் வாங்காமல் நடிக்க வேண்டும். இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்