தியேட்டரில் வெளியான படங்கள் ரசிகர்களின் ஆதரவை பெறாததால் 18 படங்கள் வரை ஓடிடியில் வெளியாக உள்ளன. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதுவரை தியேட்டரில் 7 படங்கள் திரைக்கு வந்துவிட்டன. இந்த ஏழு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கொரோனா தாக்கத்தால் தியேட்டர்களுக்கு செல்ல ரசிகர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் தியேட்டரில் கூட்டம் இல்லை. தீபாவளி சமயத்தில் தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கூட்டம் வராததால் இதில் 55 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. பல தியேட்டர்களில் பல சினிமா காட்சிகளை ரத்து செய்து வரும் நிலை நீடிக்கிறது. இதனால் திரைக்கு வந்த புதிய படங்கள், நஷ்டத்தை சந்தித்துள்ளன. எனவே இனி திரைக்கு வரவேண்டிய பல சிறு படங்களின் தயாரிப்பாளர்கள், தியேட்டரில் தங்கள் படங்களை திரையிட தயங்கி வருகின்றனர். ஓடிடியில் அந்த படங்களை வெளியிட்டால், உருவாக்கிய பட்ஜெட்டை விட லாபம் பார்த்துவிடலாம். ரசிகர்களும் அதிகம் பேர் பார்ப்பார்கள் என கருதுகிறார்கள்.