நன்றி குங்குமம் ஆன்மிகம்
‘உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.’
(குறள்: 1316)‘இந்தப் பிறவியில் உன்னைப் பிரியமாட்டேன்!’ என்றான் தலைவன். இதைக் கேட்டுத் தலைவி மகிழ்வாள் என்பது அவன் எண்ணம். ஆனால் அவளோ அடுத்த பிறவியில் பிரிவார் போலிருக்கிறது என்றெண்ணி அழத் தொடங்கினாளாம்!‘இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்ணிறை நீர்கொண் டனள்.’(குறள்: 1315)நாம் யாராவது தும்மினால் நம்மை யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்று சொல்லும் இப்போதைய மரபு வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது. தலைவன் தும்மினான். தலைவி ‘நீர் வாழ்க!’ எனக் கூறி அவன் தலையைத் தட்டினாள். உடனே நாம்தான் இங்கிருக்கிறோமே, அப்படியிருக்க வேறு யார் தலைவனை நினைக்கிறார்கள்? வேறு யாரோ ஒருவர் நினைத்ததால் தானே தலைவனுக்குத் தும்மல் வருகிறது என்ற எண்ணம் அவள் மனத்தில் எழுந்தது. அடுத்த கணம், அவள், அவனை எப்படி தன்னைத் தவிர இன்னொருவர் நினைக்கலாம் என எண்ணியவளாய் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாளாம்!‘வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.’(குறள்: 1317)இப்படிக் காதல் சார்ந்த பல நகைச் சுவைச் சித்திரங்களை வள்ளுவர் தீட்டிக் காட்டுகிறார். இந்தக் கற்பனைகளை அறிவியல் நோக்கில் அணுகக் கூடாது! இவை ஓர் இலக்கியவாதியின் இனிய கற்பனைகள் எனப் புரிந்துகொண்டு ரசிக்க வேண்டும்.இத்தகைய அழகிய கற்பனைகள் நம் மனத்தை மென்மையாக்குகின்றன. உள்ளம் ஒன்றுபட்ட உயர்ந்த காதலின் உன்னதத்தை இந்தக் கற்பனைகள் உயர்த்திப் பிடிக்கின்றன.உள்ளம் ஒன்றுபட்ட உயர்ந்த காதலுக்கு உதாரணம் என்றால் அது ராமனும் சீதையும் தானே? ஒரு ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் அபூர்வமான கற்பனையொன்று வருகிறது. அசோக மரத்தடியில் இருக்கும் சீதை, ராமன் தன்னையே நினைத்துக் கொண்டு கடும் துயரத்தில் ஆழ்ந்திருப்பான் என்பதைச் சரியாகவே ஊகிக்கிறாள்.எனவே தனக்குக் காவலாக நியமிக்கப்பட்டவளும் அதே நேரம் தனக்கு அந்தரங்கமானவளும் ஆகிய திரிஜடையிடம் ஒரு சிக்கலான பிரச்னை குறித்துக் கேள்வி எழுப்புகிறாள். ‘திரிஜடா! ஸ்ரீராமர் என்னைப் பிரிந்தது முதல் எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டு துயரத்தில் ஆழ்ந்திருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பதை நான் நன்கு அறிவேன்.ஒருவர் என்ன நினைக்கிறாரோ அதுவாகவே ஆகிறார் என்று சொல்வதுண்டு. அப்படியானால் என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் கொஞ்ச காலத்தில் சீதையாக மாறிவிடுவாரே? சிறிதுகாலம் கழித்து உலகில் ராமரே இல்லாமல் இரண்டு சீதைகள் அல்லவா இருப்பார்கள்? என்ன செய்வது அப்போது?’ சீதையின் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கலகலவென்று சிரிக்கிறாள் திரிஜடை. ‘அப்போதும் உலகில் ஒரு சீதையும் ஒரு ராமரும் தான் இருப்பார்கள் அம்மா!’ என்கிறாள் அவள். எப்படி என்று கேட்ட சீதையிடம், திரிஜடை விளக்குகிறாள்.‘அம்மா! உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் அவர் சீதையாகும்போது, அவரையே நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் ராமராகி விடுவீர்களே!’ இது மனமொன்றி வாழ்ந்த தெய்வீகத் தம்பதி பற்றிய ஓர் அபூர்வ ராமாயணச் சித்தரிப்பு. ராமாயணத்தில் முறை தவறிய ஒருதலைக் காதல் பற்றிய சித்தரிப்பும் வருகிறது. அதில் ஒன்று சீதைமேல் ராவணன் கொண்ட காதல். இன்னொன்று ராமன்மேல் சூர்ப்பணகை கொண்ட காதல்.ராவணன் சீதைமேல் கொண்ட காதலை ஒருதலைக் காதல் என்று சொல்வதா அல்லது பத்துத் தலைக் காதல் என்று சொல்வதா! காமம் அவனை அலைக்கழிக்கிறது. சூர்ப்பணகை சீதையின் பேரழகைப் பற்றிச் சொன்னதிலிருந்து காணுமிடமெல்லாம் சீதை பற்றிய கற்பனைத் தோற்றமே அவன் கண்ணில் தென்படுகிறது.‘மைதீட்டிய கண்ணோடு மயிலைப் போல் இதோ என் கண்முன்னால் தென்படும் இந்தத் தோற்றம் தானே நீ சொன்ன சீதை?’ எனத் தன் தங்கையிடம் வினவுகிறான் ராவணன்.ஆனால், சூர்ப்பணகைக்கோ காணுமிடமெல்லாம் ராமனின் தோற்றமே தென்படுகிறது. ‘ஆமாம். ஆமாம். செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயோடும் தடம் தோளோடும் தடக் கைகளோடும் கருநிறக் குன்றம் போல இதோ தென்படுகிறானே, நான் சொன்ன அந்த ராமன் இதோ இவனேதான்!’ என்கிறாள் அவள். காமப் பித்துப் பிடித்த அண்ணனையும் அந்த அண்ணனுக்கேற்ற தங்கையையும் நகைச்சுவை நயத்தோடு சித்தரிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்:‘பொய் நின்ற நெஞ்சில் கொடியாள் புகுந்தாளை நோக்கி,நெய் நின்ற கூர் வாளவன், ‘நேர் உறநோக்கு நங்காய்!மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர்இந்நின்றவள் ஆம்கொல் இயம்பிய சீதை?’ என்றான்.‘செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயினோடும் சந்தார் தடம் தோளொடும் தாழ் தடக்கைகளோடும் அம் தார் அகலம் அத்து ஒடும் அஞ்சனக் குன்றம் என்ன வந்தான் இவன், ஆகும் அவ் வல் வில் இராமன்!’ என்றாள்!’வில்லொடித்து ராமன் வெற்றி வீரனாய் நின்றபோது அவன் தோளில் மணமாலையைச் சூட்டிவிட்டுக் குனிந்து நின்றாளாம் சீதை. அப்போது அவள் தோழி நீலமாலை, ‘நீ உப்பரிகையில் நின்று கூந்தல் உலர்த்தும் வேளையில் ஒருவனை வீதியில் பார்த்து மனத்தைப் பறிகொடுத்தாயே? அவன்தானா இவன் என்று தெரிய வேண்டாமா? வெட்கத்தை விட்டு நிமிர்ந்து அவனைப் பார்!’ என்றாள். ஆனாலும் சீதை ராமனை நிமிர்ந்து பார்க்கவே இல்லையாம்.‘சீதம்மா! உன் தந்தை ஜனகர் உனக்கு அணிவித்திருந்த அட்டிகையில் உள்ள பதக்கத்தில் தெரிந்த ஸ்ரீராமரின் பிரதிபிம்பத்தைத் தானே நீ ரகசியமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாய்?’ என ஒரு கீர்த்தனையில் கேட்கிறார் தியாகராஜர்!காதல் வயப்பட்டால் பெண்களுக்கு வெட்கம் வந்துதூவிடுகிறது. கன்னம் சிவக்க வெட்கத்தோடு நிற்கும்போது அவர்கள் இன்னும் அழகாகி விடுகிறார்கள்.திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சியில் அப்படித்தான் குற்றால நாதரைக் காதலிக்கும் தலைவி வெட்கப் படுகிறாள். குறி சொல்கிற குறத்தி, விரைவில் அவளைச் சந்திக்கக் குற்றால நாதர் வருவார் என்று குறிசொல்கிறாள்.தன் தலைவன் தன்னைத் தேடி வரப்போகிறான் என்ற எண்ணத்தில் தலைவியின் கன்னங்கள் நாணத்தால் சிவக்கின்றன. அந்த நாணச் சிவப்பை ரசிக்கும் குறத்தி கேட்கும் கேள்வி நம்மை முறுவலில் ஆழ்த்துகிறது.‘அதுசரி. தலைவனை நீ நேரில் சந்திக்கும் போது இந்த வெட்கம் உதவாதே? அப்போது என்ன செய்வாய்? உன் வெட்கத்தை எடுத்துக் கக்கத்தில் வைத்துக் கொள்வாயா?’ எனக் கேட்கிறாள் அவள்!‘கைந்நொடியில் பொன்னிதழி மாலை வரும்காண் - அப்போ கக்கத்தில் இடுக்குவையோ வெக்கத்தை அம்மே?’இலக்கணம் பிசகாத மரபுக் கவிதையில் வட்டாரப் பேச்சு வழக்கைப் புகுத்தி அப்போது என்பதை அப்போ என்றும் கட்கம் என்பதைக் கக்கம் என்றும் எழுதி நம்மை வியக்கவைக்கிறார் திரிகூட ராசப்பக் கவிராயர்.‘அன்னை இல்லம்’ திரைப்படத்தில், கே.வி. மகாதேவன் இசையில் டி.எம். செளந்தரராஜன் குரலில் ஒலிக்கும் கண்ணதாசனின் திரைப்பாடல் ஒன்று, பெண்ணின் இடை இல்லாததைப் போல் இருப்பதாகக் கூறுகிறது!
‘நடையா இது நடையாஒரு நாடகமன்றோ நடக்குதுஇடையா இது இடையாஅது இல்லாதது போல் இருக்குது!’பிரிவுத் துயரால் இடை மெலிவதைப் பற்றிப் பல கற்பனைகள் இலக்கிய உலகில் உண்டு. அதில் ஒரு கற்பனை இது. தன் தலைவனைப் பிரிந்து மிகவும் மெலிந்துவிட்ட தலைவியிடம் தோழி கேட்டாளாம்:‘என்னடி இது? உன்னவரைப் பிரிந்த வருத்தத்தில் இப்படி மெலிந்துவிட்டாய்? போகிற போக்கைப் பார்த்தால் உன் விரல் மோதிரமே உன் இடுப்பு ஒட்டியாணமாகப் பயன்படும் போலிருக்கிறதே?!’காதல் பேச்சுக்கள் அளவற்ற மகிழ்ச்சியில் பிறப்பவை. எனவே, அவற்றில் நகைச்சுவை இருப்பது இயல்புதான். நீதிநூலை இலக்கியமாக எழுதிய திருவள்ளுவரும் தம் காதல் தொடர்பான குறட்பாக்களில் நகைச்சுவையைக் கலந்து நம் முகத்தில் முறுவலைப் பூக்க வைப்பதில் வியப்பென்ன இருக்கிறது?(குறள் உரைக்கும்)தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்