விஷக் காய்ச்சலை துரத்தும் திருநீலகண்டப் பதிகம்

திருஞானசம்பந்தப் பெருமான் ஒரு முறை திருசெங்கோட்டிற்கு அடியார்களோடு வந்திருந்தார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் விஷக் காய்ச்சல் பரவியிருந்தது. மக்களும், இவருடன் சென்ற அடியார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாயினர். திருஞானசம்பந்தப் பெருமான் மக்களின் இந்த துயரத்தைப் போக்குவதற்காக இறைவனை நோக்கி திருநீலகண்டப் பதிகம் என்று பாடி அருளினார். செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம் என்று ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் வேண்டியபடி அமைந்த பதிகம் இது. கொரோனா வைரஸ் என்று நாம் எதிர்கொண்டிருக்கும் இந்த தொற்று நோய் காலத்தில் தினமும் வீட்டிலேயே அமர்ந்து ஈசனை மனதில் நிறுத்தி சொல்லியபடி இருந்தால் விரைவிலேயே ஈசனின் திருவருளால் இவ்வுலகம் விரைவிலேயே மீண்டெழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  

 திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம்

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்

பூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்

தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்

முலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்

விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர்

இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்

சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்

புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே

கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்

திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண்  தோளுடையீர்

கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்

செற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்

மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்

பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே

உருகிமலர் கொடுவந்துமை யேத்துதும் நாம் அடியோம்

செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே

திருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து

தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்

தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்

சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்

பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்

தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்

இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்

திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே.

Related Stories: