தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூச்சாட்டு திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பக்தர்கள் அமராவதி ஆற்றங்கரைக்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு தீர்த்தம் செலுத்தினர். பிறகு பக்தர்கள் அலகு குத்தியும் பூவோடு எடுத்தும் அம்மனை தரிசித்து வந்தனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு நகர்வலம் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நிறைவு நாளான நேற்று அலங்கார வாகனத்தில் வடதாரை காமராஜ புரத்திலிருந்து தாரை, தப்பட்டை, மேளங்கள் முழங்க மாரியம்மன் உற்சவசிலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.