வருமுன் காக்கும் மார்கழி

ஜோதிடம் என்கிற மருத்துவம் - 50

அந்தந்த நாடுகளின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப அந்தந்த நாட்டு உணவுப்பழக்கம் என்பது நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன நாகரிகம் என்ற பெயரிலும், வீண் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டும் இந்தப் பழக்கத்தினை மாற்றும்போதுதான் உடல்நிலையில் பிரச்சினை என்பது உண்டாகிறது. பிஸ்கட், சாக்லேட், பீட்சா, பர்கர் முதலான தின்பண்டங்கள் நமது நாட்டு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவை அல்ல. அதற்கு பதிலாக கமர்கட், சமோசா, காய்கறிகளை உள்ளடக்கிய கார போளி முதலான தின்பண்டங்கள் மேலானவை. தட்பவெப்பநிலையை முக்கிய காரணியாக எடுத்துக் கொள்வதன் நோக்கம் மேலே செல்ல செல்லப் புரியும். இதோ மார்கழியில் அடியெடுத்து வைக்கப் போகிறோம். மார்கழி என்றதும் பனியின் தாக்கம் நம் கண்முன்னே வந்து நிற்கும். காலை ஒன்பது மணி வரை பனிப்பொழிவு இருந்தாலும் பகலில் சுளீரென்று வெயில் அடிக்கும். மதியம் மூன்று மணிக்கெல்லாம் திடீரென்று அந்தி சாய்ந்துவிட்டது போல் இருட்டிக் கொண்டு வரும். எதிர்பாராத வகையில் திடீர் திடீரென்று மழை பொழியும்.

இதுதான் என்று நிர்ணயிக்க முடியாதவாறு தட்பவெப்பநிலை நிலையற்றதாய் இருக்கும். இந்தச் சூழலில் நமது வாழ்வியல் முறை என்ன, இந்த மாதத்தில் வரும் நோய்களில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நம் முன்னோர்கள் தெளிவாக வரையறுத்து வைத்துச் சென்றிருக்கிறார்கள். பஞ்சாங்கத்தில் கர்ப்போட்டம் என்று ஒரு கால நேரத்தைக் குறித்திருப்பார்கள். மார்கழி மாதத்தில் வருகின்ற இந்த கர்ப்போட்ட காலத்தில் வானில் சூழுகின்ற மேகங்களைக் கொண்டும், அந்த நாட்களில் நடக்கின்ற புயல், மழை, வெயில், காற்று ஆகியவற்றின் தன்மை கொண்டும் அடுத்த ஒரு வருடத்திற்கான மழையைக் கணிப்பார்கள். அதாவது அடுத்த வருடத்தில் பஞ்சம், வறட்சி முதலியன உண்டாகுமா அல்லது பெருமழையால் வெள்ள பாதிப்பு உண்டாகுமா அல்லது மிதமான மழை இருக்குமா என்பதையெல்லாம் இந்த கர்ப்போட்ட காலத்தினைக் கொண்டு நிர்ணயம் செய்துவிடுவார்கள்.

அதற்கேற்றார்போல் வருமுன் காப்போம் என்ற கொள்கையோடு நம் முன்னோர்கள் உணவு தானியங்களை பயிரிடுவதிலும், தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினார்கள். இன்று நாம் அந்த இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை இழந்துவிட்டோம். அதுபோன்ற திட்டங்களைத் துறந்து நாம் நினைப்பது போல் எல்லாமும் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். அதற்கேற்றார் போல் செயற்கையான உபகரணங்களின் துணைகொண்டு இயற்கையை எதிர்த்து நிற்கிறோம். வெயில் அடித்தால் ஏர்கண்டிஷன் அறைகளில் புகுந்துகொள்வது, குளிர் அதிகமானால் ஹீட்டர் உபயோகிப்பது என்று இயற்கைக்கு எதிராக நம் உடம்பினை பராமரிக்க கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு நாள் மின்சாரம் தடைப்பட்டால் நம் உடம்பு இயற்கைச் சூழலை தாக்குப் பிடிப்பதில்லை. நோய்வாய்ப்பட்டு அல்லாடுகிறோம். உண்மையில் இந்த மார்கழி மாதத்தில் நிலவும் கர்ப்போட்ட காலம் என்பது இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு வரப்பிரசாதம். பனி அதிகம் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது தவறு.

இந்தக் காலத்தில்தான் பெண்கள் அதிகாலையில் வீட்டு வாசலில் அமர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வண்ணக் கோலமிடுவர். காரணமில்லாமல் நம் முன்னோர்கள் இந்தச் செயலை கண்டிப்பாக எல்லோருடைய வீடுகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருப்பார்களா? வீட்டிற்கு வெளியே பனிப்பொழிவு நிறைந்த அந்த நேரத்தில் பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலமிட்டுக் கொண்டே சுவாசிக்கும் அந்த பனி கலந்த காற்று அவர்களுடைய நுரையீரலுக்குள் கலந்து அடுத்து வருகின்ற ஒரு வருட காலத்தினையும் எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்புத் திறனை அவர்களுக்கு வழங்குகிறது. வயது பேதம் இன்றி சிறுவர் முதல் முதியவர் வரை பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டு வீதிகளை வலம் வந்து ஆலயத்தைச் சென்றடைவர். கிட்டத்தட்ட அதே ஒன்றரை மணி நேரம் நடந்துகொண்டும், வாய்விட்டு பாடிக் கொண்டும், கைளில் வாத்தியங்களை இசைத்துக் கொண்டும் உடலுக்கு ஏதோ ஒரு வகையில் வேலையைத் தருவதோடு, பனி கலந்த காற்றினை சுவாசிக்கும் வகையிலும் இந்த மார்கழி மாத பஜனை என்பது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

சிறுவர் முதல் முதியவர் வரை எல்லோரும் அடுத்து வரும் ஒரு வருட காலத்தில் தோன்ற உள்ள எல்லா நோய்களில் இருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள ஏதுவாக நோய் எதிர்ப்புச் சக்தியினை இந்த அதிகாலை சுவாசமானது அவர்களுடைய உடலில் தேக்கி வைக்கும். இந்த உண்மையினைப் புரிந்து கொள்ளாது நாம் இவற்றை எல்லாம் பழம் பஞ்சாங்கம் என்ற பெயரில் தூக்கி எறிந்துவிட்டோம். வீட்டு வாசலில் வண்ணக் கோலமிடுதல் என்பது பாரம்பரியமான ஒன்று, அந்தப் பாரம்பரியத்தை விட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் பெண்கள் கூட முதல்நாள் இரவிலேயே அந்தக் கோலத்தை போட்டு வைத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறான ஒன்று. இவ்வாறு முதல்நாள் இரவிலேயே கோலம் போட்டு வைத்துவிடுவதால் அதற்குரிய நோக்கம் நிச்சயமாக நிறைவேறாது. வண்ணக் கோலமிடுவதன் நோக்கம் என்னவென்றால் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் பனி கலந்த காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதே.

அவ்வாறு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தக் காற்றினை மாதம் முழுவதும் சுவாசித்து வரும்போது நிச்சயமாக நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலில் பெருகும். வருடா வருடம் சீசனுக்குத் தகுந்தாற்போல் வருகின்ற டெங்கு, சிக்குன் குன்யா மற்றும் நிபா வைரஸ் என்று புதிது புதிதாக சொல்லப்படுகின்ற நோய்கிருமிகள் எதுவும் நம்மை அண்டாது. இந்தக் கூற்றினில் நம்பிக்கை இல்லை என்றால் இந்த வருடத்திலாவது பரிசோதித்துப் பாருங்கள். மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வண்ணக் கோலமிடுங்கள். சிறுவர் முதல் முதியவர் வரை எல்லோரும் மார்கழி மாத அதிகாலை பஜனைகளில் கலந்து கொள்ளுங்கள். பஜனைகளில் கலந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் தங்கள் வீட்டுச் செல்லப்பிராணியை அழைத்துக்கொண்டு நடைபழகுங்கள். இளைஞர்கள் அதிகாலை நேரத்தில் மிதிவண்டியில் ஊர்சுற்றி வாருங்கள். எதைச் செய்தாலும் நோக்கம் ஒன்றுதான்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் வீசும் குளிர்ந்த காற்றினை சுவாசிக்க வேண்டும். அது ஒரு சுகமான உணர்வு என்று எண்ணுங்கள். அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் அதன் அருமையும் பெருமையும் என்று சக நண்பர்களுடன் பிரஸ்தாபியுங்கள். உண்மையில் இந்த பனியுடன் கலந்த குளிர்ந்த காற்றினை சுவாசித்துப் பாருங்கள். துவக்கத்தில் சற்று கஷ்டமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்லப் பழகிவிடும். பனியினால் முதலில் சளி, ஜலதோஷம் என்று வந்தாலும் அதற்குத் தனியாக மாத்திரைகளை உட்கொள்ளாதீர்கள். கஷாயம், வெந்நீர் குடித்தல், துளசி தைலத்தினை தடவிக் கொள்ளுதல் போன்ற பாட்டி வைத்தியத்தை கையாளுங்கள். இந்த இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு உங்கள் உடலைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக இந்த ஒரு மாத காலத்தில் நீங்கள் செய்யும் இந்த பயிற்சியும் பழக்கமும் இந்த வருடம் முழுவதும் எந்த விதமான நோய்தொற்றும் உண்டாகாமல் உங்களைக் காக்கும்.

மார்கழியின் இடைப்பட்ட காலத்தை கர்ப்போட்டம் என்று பஞ்சாங்கத்தில் குறித்திருக்கிறார்களே.. அந்தப் பெயருக்கான காரணம் என்ன என்பது புரிகிறதா? அன்னையின் கர்ப்பத்தில் நாம் இருக்கும்போதுதான் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியானது நம்மிடம் வந்து சேர்கிறது. அதே போல இந்த கர்ப்போட்ட காலத்தில் நாம் சுவாசிக்கும் இயற்கை காற்றுதான் நம்மை நோயிலிருந்து காக்கிறது என்பதை உணர்ந்துதான் பெரியவர்கள் இந்த காலத்தினை கர்ப்போட்ட காலம் என்று அழைத்தார்கள். மூட்டுவலி, மூச்சுப்பிடிப்பு உள்ளவர்கள் பனியில் சென்றால் பிரச்சினை அதிகமாகிவிடும் என்று அஞ்சுவார்கள். ஏற்கெனவே நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் இந்தப் பனிக்காற்றிற்கு அஞ்சத் தேவையில்லை. காசநோய் முதலான நுரையீரல் பிரச்சினை இல்லாதவர்கள் தைரியமாக இந்தப் பனிக்காற்றினை சுவாசிக்கலாம். பனியில் உடலில் உள்ள மூட்டுக்கள் அதாவது ஜாயின்ட்டுகள் இறுகிவிடும் போன்ற கருத்துக்களில் உண்மை இல்லை.

பனியின் தன்மைக்கு ஏற்றவாறு உடலை சூடாக்கிக் கொள்ள வேண்டும். வேகமாக நடப்பது, கைகளை வேகமாக சுழற்றிக் கொண்டே நடப்பது, யோகாசனங்களைச் செய்வது என்று இரத்த ஓட்டத்தின் சூட்டினை உணரும் வகையில் வேகமாகச் செயல்படும்போது பனியின் தாக்கம் எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்காது. மாறாக நம் உடலின் ஆரோக்யம் சீரடையும் என்பதே நிதர்சனமான உண்மை. சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது உச்ச பலத்துடனும், அதிலிருந்து ஐந்தாவது மாதமான ஆவணியில் சிம்மராசியில் சஞ்சரிக்கும்போது ஆட்சி பலத்துடனும் சஞ்சரிப்பார். ஆவணியிலிருந்து ஐந்தாவது மாதம் ஆன மார்கழியில் அதாவது தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில் உச்சமோ, ஆட்சி பலமோ பெறவில்லை என்றாலும், அதற்கு நிகரான பலம் தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது உண்டு.

நெருப்பு ராசிகள் என்று இந்த மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றினையும் ஜோதிடர்கள் பிரித்து வைத்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் உடலிற்குத் தேவையான உஷ்ணம் ஆனது இந்த மேஷ, சிம்ம, தனுர் மாதங்களில் அதாவது முறையே சித்திரை, ஆவணி, மார்கழி ஆகிய இந்த மூன்று மாதங்களில் சூரியனின் மூலமாக நமக்கு கிடைக்கிறது என்பதற்காகத்தான் அந்த ராசிகளை இவ்வாறு நெருப்பு ராசிகள் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஏ.சி. அறைகளுக்குள் முடங்கியிருக்காமல், இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்காமல், மார்கழியின் மகத்துவத்தை அனுபவித்து உணருங்கள். உன்மடி மேலே ஓரிடம் வேண்டும் என்று மார்கழிப் பூவிடம் இடம் கேட்ட கவிஞனின் வரிகளை மனதில் கொண்டு இந்த மாதம் முழுவதும் அதிகாலைப் பனிக்காற்றினை சுவாசியுங்கள். வருடம் முழுவதிற்குமான ஆரோக்கியத்தினை அடையுங்கள்.

திருக்கோவிலூர் கே.பி. ஹரிபிரசாத் சர்மா

(தொடரும்)

Related Stories: