உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறந்த இடத்தில் திருமடம் கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றது. இதை தொடர்ந்து திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் திருவிளக்கு வழிபாடும், முதல்கால வேள்வியும் நடைபெற்றது. வேள்வி நிறைவுக்கு பிறகு நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் திருமுறை விண்ணப்பம் செய்து விமானம் மற்றும் மூலமூர்த்திகளான சுந்தரர், வினாயகர், சடையநாயனார், இசைஞானியார், நரசிங்க முனையரையர் ஆகிய சிலைகளுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.