பருவமழை பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வருவாய்த்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர்  பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் துவங்கும். பருவமழையின் தாக்கம் அதிகமாக காணப்படும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மண்சரிவு, ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வருவாய்த்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றால் செயல்படுத்த வேண்டிய பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கூடலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் பயன்படுத்தப்படும் பேரிடர் கால மீட்பு மற்றும் பாதுகாப்பு கருவிகளின் இயக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாலுகா அலுவலக வளாகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட இந்த கருவிகள் மற்றும் இயந்திரங்களை பொதுமக்கள் பார்வையிட்டனர். ஆர்டிஓ சரவண கண்ணன், தாசில்தார் ராஜ் ஆகியோர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்களை எதிர்கொண்டு அவற்றை சமாளிக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் இயந்திரங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் முன்கூட்டியே ஆய்வு செய்யப்பட்டு அவற்றை தயார் நிலையில் வைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய்துறையினர் தெரிவித்தனர்….

The post பருவமழை பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: