×

நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த தந்தை- மகன் உட்பட 6 பேர் கைது 4 துப்பாக்கிகள் பறிமுதல் குடியாத்தம் அருகே வேட்டையாடுவதற்காக

 

 

குடியாத்தம், ஆக. 4: குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை தயாரித்த தந்தை, மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அரசின் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி டவுன் போலீசார் கல்லேரி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கல்லேரி பகுதியை சேர்ந்த சின்னப்பன் (35), ஆறுமுகம் (24), ஏழுமலை (20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், தீவிர விசாரணை மேற்கொண்டதில் அணைக்கட்டு அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்த பவுனு (75), அவரது மகன் சதாசிவம் (45) ஆகியோரிடம், பணம் கொடுத்து நாட்டு துப்பாக்கி வாங்கி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அணைக்கட்டு பகுதியில் குடியாத்தம் டவுன் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பவுனு அவரது மகன் சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் நாட்டு துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெல்டிங் மெஷின் உள்ளிட்ட மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியை சேர்ந்த மனோகரன் (56) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த தந்தை- மகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த தந்தை- மகன் உட்பட 6 பேர் கைது 4 துப்பாக்கிகள் பறிமுதல் குடியாத்தம் அருகே வேட்டையாடுவதற்காக appeared first on Dinakaran.

Tags : Gudiyatham ,Galleri village ,Vellore district ,
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.24...