?எப்போதும் இறைவனையே நினைத்து, அவர் புகழ்பாடி, அவருக்குத் தொண்டு செய்யும் ஒருவன் தெய்வத்தின் திருவடியைக் காணமுடியுமா?
– எம்.ஜே.சுந்தரேசன், மேலவேலூர்.
நிச்சயமாக முடியும். அதாவது, நினைவுகள் எல்லாம் இறைவனே என்று ஆகும்போது தெய்வத்தின் திருவடியைக் காண்பது சுலபம்-தான். இறைவனை முற்றிலுமாக சரணடைவதால் அது சாத்தியம்தான். ஒரு விஷயம் கவனித்தீர்களா, இறைவனை நாம் எந்த உருவில் வணங்கினாலும் – பல கைகள், தலைகள் என்று அந்த ஒவ்வொரு கடவுளின் பாதமும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறது! ஆகவே, பாத சரணாகதி அடையும் மனப்பக்குவம் உள்ள எந்த பக்தராலும், இறைவனுடைய திருவடியைக் காண முடியும். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் திருவள்ளுவர்கூட இறைவனது பாதத்தைதான் சிறப்பித்துக் கூறுகிறார்: வாலறிவன் நற்றாள்; மலர்மிசை ஏகினான் மாணடி; வேண்டுதல் வேண்டாமை இலான் அடி; தனக்குவமை இல்லாதான் தாள்; அறவாழி அந்தணன் தாள்; எண்குணத்தாள் தாளை; இறைவன் அடி. ஆக, திருமூலர் சொன்னதுபோல ‘அவனருளாலே அவன் தாள் வணங்கினால், எளிதாக அவன் திருவடியைக் காணமுடியும்!’
?கடவுள் அன்புமயமானவர் என்கிறார்கள். ஆனால், சில கடவுள்கள் – உதாரணமாக காளி, துர்க்கை, நரசிம்மர், காட்டேரி, சாமுண்டி, அய்யனார் போன்ற சிலைகள் பயமுறுத்தும் தோற்றத்தில் உள்ளனவே! அன்புமயமான கடவுள் இப்படி அச்சமூட்டும் உருவத்தில் ஏன் தோன்றுகிறார்கள்?
– சுமதி சடகோபன், திருவாமாத்தூர்.
குழந்தைகள் தவறு செய்யக்கூடாது என்பதற்காக, ‘சாமி கண்ணைக் குத்திடும்’ என்று பயமுறுத்தி வைத்த பாரம்பரிய வழக்கம் ஒன்று இருந்தது. இப்போதும் சில வீடுகளில் அந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். கடவுளின் கருணை காரணமாக, அவர் நேரடியாக நமக்கு தரிசனம் தருவதில்லை என்பதற்காக, அவர் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்துவிடக்கூடாது; அவர் மீது பயம் தோன்ற வேண்டும். அப்போது தான் அவர் மீதான பக்தி வளரும் என்பது சிலருடைய வாதம். அந்த வகையில் கடவுள் உருவங்களை பயம் தோன்றும்படியாக வடிவமைத்திருப்பார்கள் என்றும் சொல்வார்கள்.ஆனால், கடவுள் தீயவைகளை அழிக்கக்கூடியவர். எங்கெங்கெல்லாம் தீமை முளைக்கிறதோ அங்கெங்கெல்லாம் இறைவன் தோன்றுகிறார். அப்படி அழித்த பிறகு, அவர் தோன்றிய உருவத்திலேயே சிலையாக மாறி, அந்தப் பகுதி மக்களுக்குத் தொடர்ந்து நல்வழி காட்டுகிறார். அதுமட்டுமல்ல, அந்த கடவுள் உருவங்களை பார்க்கும்போது, மனம் சலனப்பட்டு தவறான வழியில் போக முயற்சிசெய்பவர்கள் கடவுள் நம்மை தண்டித்துவிடுவார் என்று பயந்து அந்த எண்ணத்தையே மா றிக்கொண்டு விடவும் வாய்ப்புள்ளது. இரண்யனுக்கு கொடியவராகத் தெரிந்த நரசிம்மர், பிரகலாதனுக்கு இனியவராகத் தெரியவில்லையா?
?கோயில்களில் இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதங்களை ஏன் கோயில் மடப்பள்ளியிலேயே தயாரிக்கிறார்கள்? வெளியிலிருந்து தயாரித்து வரக்கூடாதா?
– வரதலட்சுமி, அரக்கோணம்.
கோயில், நம் வீடு மாதிரிதான். நமக்குத் தேவையான உணவை வீட்டு சமையலறையில்தானே தயாரிக்கிறோம். அதுபோலத்தான் ஆலயமும். இறைவனுக்கான பிரசாதங்கள் அந்தந்த ஆலயங்களில் தயாரிக்கப்படுவதுதான் சரி. வீட்டில் சில சமயம் உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். அவர்கள் ஏதேனும் பலகாரம் வாங்கி வருவார்கள். அல்லது நாமே ஓட்டல்களுக்குச் சென்று வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிடுகிறோம். இதேபோலதான் சில பக்தர்கள் தம் வீடுகளிலிருந்து உணவுப் பொருட்களை தயாரித்துக்கொண்டு வந்து, கோயிலில் இறைவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு, அங்கே வந்திருக்கக்கூடிய பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்கள். ஆகவே கோயிலில் மடப்பள்ளி என்பது நம் வீடுகளில் சமையலறை போலத்தான். திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி ஆலயத்து மடப்பள்ளியில் ஒரு தூணில் தாயார் உருவம் செதுக்கப்பட்டிருக்கும். அதாவது, அந்த ‘சமையலறை’ பணிகளை பெருமாளின் தாயார் வகுள மாலிகை தம் நேரடிப் பார்வையில் நிர்வகிக்கிறாராம்!
?தீய கனவுகள் வருகின்றன. எப்படித் தவிர்ப்பது? அது ஏதேனும் அச்சான்யத்தின் அறிகுறியா?
– எஸ்.பி.தளவாய் பூபதி, விழுப்புரம்.
மனதில் குழப்பங்கள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினசரி நடவடிக்கைகளில் யாருக்கும் தீங்கு நினையாதிருக்கப் பழகுங்கள். முயற்சிகள் தோல்வியுற்றால், துவளாமல், வேதனையில் ஆழ்ந்து-போகாமல், அமைதியாக மேலும் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளப் பாருங்கள். வெற்றி கண்டுவிட்டால் அதனை ஆரவாரமாகக் கொண்டாடாதீர்கள். அது பிறர் பொறாமைக்கு வழிவகுக்கும். உங்கள் திறமைக்குக் கிடைத்த வெற்றிதான் என்றாலும், அதை எல்லோரும் சகித்துக் கொள்வார்கள், ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே, நல்லதோ, கெட்டதோ இரண்டையும் ஒரே மாதிரி பாவிக்கப் பழகுங்கள். இந்த மனப் பழக்கத்திற்கு பிராணாயாமம், தியானம், யோகா என்று பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மனம் அமைதியுற்றால் தீய கனவுகள் கிட்டவே நெருங்காது. அமைதியுறும் மனம், பிறருக்குத் தீங்கு நினைக்காது என்பதால் எப்போதும் நற்சிந்தனைகளுடனேயே இருக்கும். ஆகவே கனவுகள் தூக்கத்தில் துன்புறுத்தாது. இத்தகைய மனநலப் பயிற்சிக்கு முதல்படியாக, இரவு உறங்குமுன் ஒருசில வினாடிகள் இறைவனை உளமார நினைத்துவிட்டு, சிறிது விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு, உறங்கப் போகலாம்.
?கோயிலுக்குள் சென்று இறை வழிபாடு செய்துவிட்டு வெளியே வரும்போது கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்வது நல்லதா?
– துரைவேல் பாண்டி, திருப்பாச்சேத்தி.
தர்மம் செய்வது என்பது ஒரு நற்பண்பு. இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள் முடிந்ததை வழங்கி அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் அரிய பண்பு. கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்துவிட்டு, மனம் நிறைந்த அருள் பெற்று திரும்பும்போது அந்த நிறைவில் யாசகம் கேட்போருக்கு இயன்ற அளவு தர்மம் செய்வது இயல்பாகவே ஏற்பட்டுவிடும். ஓட்டலுக்குப் போய் நாம் காசு செலவழித்து சாப்பிட்டுவிட்டு, அந்த சேவைக்காக சம்பளம் வாங்கும் சர்வருக்கே நாம் டிப்ஸ் கொடுக்கிறோமே, அது வயிறு நிறைந்துவிட்ட மகிழ்ச்சியால்தானே? சிலர் கோயிலுக்குள் போகும்முன் பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்துவிட வேண்டும், இறைவனை தரிசனம் பண்ணிவிட்டு அதன்பிறகு தர்மம் செய்தால் நாம் சேகரித்துக்கொண்டு வந்த அருள், அந்த தர்மம் வழியாக நம் கைவிட்டுப் போய்விடும் என்றும் சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். சிரிப்புதான் வருகிறது. தர்மம் செய்வது என்று தீர்மானித்துக்கொண்டபிறகு, முதலிலேயே போட்டால் என்ன, அப்புறம்தான் போட்டால் என்ன? இந்த தர்ம சிந்தனைக்கே இறைவன் அருள் நிலைத்து நிற்கும். அதனால் இறைவனை வழிபட்ட பிறகு மனநிறைவோடு தர்மம் செய்வது சிறந்தது, சரியானது.
?தியானம், யோகா என்றெல்லாம் இப்போது பரபரப்பாக பேசிக்கொள்கிறார்களே… இதெல்லாம் சராசரி மனிதனுக்கு தேவையானவைதானா?
– கோமதி செங்கல்வராயன், மேட்டுப்பாளையம்.
பள்ளி நாட்களிலிருந்து தினசரி விளையாட்டு, உடற்பயிற்சி என்று பழக்கப் படுத்திக்கொண்ட ஒருவருக்கு உடலும் உறுதியாக இருக்கும்; உள்ளமும் உறுதியாக இருக்கும். இப்போதைய அவசர உலகத்தில் இப்படிப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்ள பலருக்கு நேரமே இருப்பதில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதானோ என்னவோ அந்தக் காலத்திலேயே பிராணாயாமம், தியானம், யோகா என்று இருக்கும் இடத்திலேயே உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி ஊட்டும் பயிற்சிகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். மனதை ஒருநிலைப்படுத்துவது என்பதுதான் இந்தப் பயிற்சிகளின் பிரதான நோக்கம். அப்படி செய்யும்போது புலன்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அப்புறம் என்ன, தேவைகள் அதிகரிக்காது, வசதிகளுக்கு மனம் ஆசைப்படாது; சந்தோஷம்தானே? ஆன்மிகத்திற்கும் இந்தப் பயிற்சிகளே சரியான வழிகள்.
The post தெளிவு பெறுவோம் appeared first on Dinakaran.
