தர்மபுரி, ஜூன் 12: துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட, திறமையான குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக, பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமைகளை பாராட்டி, அங்கீகாரம் அளிப்பதனை நோக்கமாக கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது.
இவ்விருதினை பெறுவதற்கு, இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 5வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தினை ஆன்-லைன் போர்டலில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விருதுக்கான விண்ணப்பத்தை, குழந்தையோ அல்லது குழந்தையை சார்ந்த பெற்றோர், ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பரிந்துரைக்கலாம். 2025ம் ஆண்டு இவ்விருதுக்கான விண்ணப்பத்தை வரும் ஜூலை 31ம் தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளுக்கு விருது appeared first on Dinakaran.
