ஒட்டன்சத்திரம், மே 23: ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, கண்ணணூர், சிறுவாட்டுக்காடு, பெத்தேல்புரம், கோட்டைவெளி, புலிக்குத்திக்காடு உள்பட 14 மலைக்கிராமங்களில் புளியந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கு விளைவிக்கும் புளியம்பழங்களை விவசாயிகள், ஒட்டன்சத்திரத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் புளி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருவர். ஆண்டுதோறும்மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் புளி மகசூல் அதிகமாக இருக்கும். குறிப்பாக வடகாடு மலைப்பகுதியில் இயற்கையாக விளையும் புளிக்கு மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு.
இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் புளியம்பழங்களை ஒட்டன்சத்திரம், பழநி, திண்டுக்கல் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் நேரில் வந்து கொள்முதல் செய்கின்றனர். ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த ஆண்டு கொட்டையுடன் கூடிய புளி 10 கிலோ ரூ.800 முதல் ரூ.850 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒட்டன்சத்திரம் சந்தைக்கு புளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது 10 கிலோ புளி ரூ.1000 முதல் ரூ.1200 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் சந்தையில் புளி விலை உயர்வு 10 கிலோ ரூ.1200க்கு விற்பனை appeared first on Dinakaran.
