மதுரை, மே 10: மதுரை வணிகவரி இணை ஆணையர் அலுவலக வளாகத்தில், கூடுதல் கட்டிடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று துவக்கி வைத்தார். மதுரையில் செயல்பட்டு வரும் வணிகவரி இணை ஆணையர் அலுவலக வளாகத்தில், ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இதற்கான நிதி தமிழக அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார். இந்த புதிய கட்டிடம் 1584.91 ச.மீ பரப்பளவில் மூன்று தளங்களுடன் அமைய உள்ளது. இதன் கட்டுமானப் பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் பி.மூர்த்தி ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன், புதூர் பூமிநாதன், வணிகவரி இணை ஆணையர் பி.கீதா பாரதி, இணை ஆணையர் (சட்டம்) எம்.மகேஸ்வரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
The post மதுரை வணிகவரி அலுவலக வளாகத்தில் ரூ.5.95 கோடியில் கூடுதல் கட்டிடம்: பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
