உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு ‘2025-ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது’: 151 பேருக்கு பணி நியமன ஆணை

சென்னை: உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு இந்தாண்டிற்கான நம்மாழ்வார் விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், 151 பேருக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன. கடந்த 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், ஊக்குவிக்கும் மற்றும் பிற உயிர்ம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்த்த “நம்மாழ்வார்” பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவ்வகையில் 2024ம் ஆண்டு மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச்செயலகத்தில் 2025ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோவையை சேர்ந்த சம்பத்குமார் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஸ்-க்கு இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் ரூபாய் பரிசு தொகை மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ்-க்கு மூன்றாம் பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

அதேபோல், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என மொத்தம் 151 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் முருகானந்தம், வேளாண்மைத்துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் ஆபிரகாம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல்பாண்டியன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு ‘2025-ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது’: 151 பேருக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Related Stories: