வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு: அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

* குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்

* வேலூர் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடியே 92 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மகன் கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா மற்றும் சகோதரர் துரை சிங்கரம் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2013ல் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மறு ஆய்வு மனுதாக்கல் செய்தது.

கடந்த 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஜனவரி முதல் வாரத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை குற்றப்பத்திரிகைகளை விளக்கி வாதிடப்பட்டது. துரைமுருகன் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, பி.வில்சன் ஆகியோர், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் சொத்துக்களை அமைச்சர் துரைமுருகன் மூலம் சேர்த்தவை என லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

வழக்கு சம்பந்தப்பட்ட காலத்துக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் குடும்பத்தினரை, அமைச்சரின் பினாமி என குறிப்பிட எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டனர். காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து அதிகாரி விசாரிக்க வேண்டிய வழக்கை, அதிகார வரம்பு இல்லாத ஆய்வாளர் இந்த வழக்கை புலன் விசாரணை செய்துள்ளார். வழக்கு தொடர்வதற்கு, சட்டப்படி அனுமதி பெறப்படவில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. அந்த உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், இந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை கடந்த ஜனவரி மாதம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனுவை ஏற்று, அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க, வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், 1996-2001ம் ஆண்டு காலத்தில் சொத்து சேர்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு: அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: