மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை திகார் சிறையில் அடைக்க திட்டம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

டெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா இந்தியா அழைத்துவரப்பட்டார். அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இன்று மதியம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார். அவர், திகார் சிறையில் அடைக்கப்படுவார் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் ஒருவர். பயங்கரவாதியான இவருக்கும், இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் அமைப்புக்கும் உதவியதாக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரும், கனடாவை சேர்ந்த தொழிலதிபருமான தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், 2013ம் ஆண்டு ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் ஒன்றிய அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பான மனுவை அமெரிக்க நீதிமன்றங்கள் விசாரித்து, அவரை நாடு கடத்த ஒப்புதல் அளித்தன. தஹாவூர் ராணாவை நாடு கடத்தி அழைத்து வர, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்பின் அதிகாரிகள் சமீபத்தில் அமெரிக்கா சென்றனர். அவர்களிடம் நேற்று ராணாவை அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர். அங்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்து, அவரை தனி விமானத்தில் நம் அதிகாரிகள் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, தஹாவூர் ராணா, டெல்லியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படுவார்.

வழக்கு இப்போது டெல்லியில் விசாரிக்கப்படுவதால் அவர் மும்பைக்கு அனுப்பப்பட மாட்டார். திகார் சிறையில் ராணா அடைக்கப்படுவார் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் டெல்லி திகார் சிறையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், ‘தஹாவூர் ராணாவை நாடு கடத்தியது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும். விசாரணை மற்றும் தண்டனையை எதிர்கொள்ள அவர் அழைத்து வரப்படுகிறார்’ என்றார்.

The post மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை திகார் சிறையில் அடைக்க திட்டம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: