அண்ணா பல்கலை. 2023-24ம் ஆண்டுக்கான வளாக நேர்க்காணல்; முதல்முறையாக ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனம் பங்கேற்பு: தொடக்க சம்பளமாக 18 லட்சம் நிர்ணயம்

சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் இறுதியாண்டில் வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ) தொடங்கி, அவர்கள் தங்களுடைய படிப்பை நிறைவு செய்யும் போது பணிக்கான உத்தரவாதத்தை பெறுகிறார்கள். இதில் பலருக்கு உயர்தரமான நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்திலும், சிலருக்கு நடுத்தரமான நிறுவனங்களில் ஓரளவுக்கு திருப்திப்படக் கூடிய வகையிலான ஊதியத்திலும் பணிகள் கிடைக்கும்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாகவும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர முக்கிய நிறுவனங்கள் அந்த நேரத்தில் அவர்களுக்கான பணியாட்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவும் தாமதம் ஆனது. அதற்கு அடுத்த ஆண்டுகளில் நேர்காணல்கள் விரைவாக நடக்க தொடங்கி விட்டது. அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளான கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய 4 கல்லூரிகளில் 2024-25ம் ஆண்டுக்கான நேர்காணல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இளநிலை, முதுநிலை மற்றும் எம்.பி.ஏ. படிப்புகளை முடித்த மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இதுவரை 210 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கடந்த 6ம் தேதி வரையிலான தரவுகளின் அடிப்படையில் இதுவரை இளநிலை படிப்புகளை முடித்த மாணவ-மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணலில், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் சார்ந்த பிரிவுகளில் 223 வேலைவாய்ப்புகளும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினியரிங், தயாரிப்பு தொழில்நுட்பம், தொழிற்சாலை இன்ஜினியரிங், உயிர்மருத்துவம் இன்ஜினியரிங் போன்ற முக்கிய பிரிவுகளில் 92 வேலைவாய்ப்புகளும், கெமிக்கல் இன்ஜினியரிங், செராமிக் தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், பெட்ரோலியம் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம், ஜவுளி தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் 71 வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

2024-25ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறைவாக தெரிந்தாலும், அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் வருகிற ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளது. எனவே இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட மேலும் அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக, பல்கலைக் கழகம்- தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மைய இயக்குநர் சண்முக சுந்தரம் கூறியதாவது: விப்ரோ, டிசிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் முதல் சுற்று நேர்காணல்களை முடித்து அடுத்த சுற்றுக்கு தயார் ஆகி கொண்டிருக்கின்றனர்.

மேலும், இந்த வருடம் டிசிஎஸ் நிறுவனம் 500 பேரையும், இன்போசிஸ் நிறுவனம் 200 பேரையும் பணிக்கு எடுக்க இருப்பதாக கூறியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சாப்ட்வேர் நிறுவனங்கள் குறைந்த அளவிலான நபர்களே போதும் என்கின்றனர். இந்த ஆண்டு முதல் முறையாக ஜப்பான் நாட்டில் இருந்து கார்களுக்கான இன்ஜின்கள் தயாரிக்கும் கோகநெய் செய்கி ( Koganei Seiki) என்ற மிகப்பெரிய நிறுவனம் வளாக நேர்காணல் மூலம் 5 பேரை ரூ.18 லட்சம் மாத சம்பளத்துடன் தேர்ந்தெடுக்க உள்ளது. வெளிநாட்டு நிறுவனம் வளாக நேர்காணலில் கலந்துகொண்டிருப்பது இதுவே முதல்முறை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் பிரிவினருக்கு வேலைவாய்ப்பு
மெக்கானிக்கல் தமிழ் பிரிவில் தகுதியுடைய 20 பேரில் 6 பேரும், சிவில் தமிழில் தகுதியுடைய 21 பேரில் 3 பேரும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

The post அண்ணா பல்கலை. 2023-24ம் ஆண்டுக்கான வளாக நேர்க்காணல்; முதல்முறையாக ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனம் பங்கேற்பு: தொடக்க சம்பளமாக 18 லட்சம் நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: