ஊட்டி: கோடை சீசன் துவங்கிய நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அலங்கரித்து வைப்பதற்காக மாடங்களை தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுசரிக்கப்படும். இச்சமயங்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வருகை தருவது வழக்கும். இந்நிலையில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் போது சுமார் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் மாடங்களில் அடுக்கி வைத்தும் கொய் மலர்களை கொண்டும் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும்.
இதையொட்டி முன்னதாகவே, பூங்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்துவுடன் மாடங்களில் பல்வேறு வடிவங்களில் அடுக்கி வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல அனுமதிக்கப்படுவர். இதற்காக பூங்காவில் மாடங்களை தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் மாடங்களில் உள்ள கண்ணாடி கூரை சீரமைப்பு பணியும், புல் மைதானம் சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post மலர் தொட்டிகளால் அலங்கரிக்க ஊட்டி தாவரவியல் பூங்காவில் மாடம் தயார்படுத்தும் பணி மும்முரம் appeared first on Dinakaran.