தினகரன் , சென்னை விஐடி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கண்காட்சி நந்தம்பாக்கத்தில் தொடங்கியது
சென்னை: தினகரன் மற்றும் VIT Chennai இணைந்து வழங்கும் மாபெரும் கல்விக்கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கல்விக்கண்காட்சியை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் கல்விக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6.30 வரை கண்காட்சி நடைபெறும்.
பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்படும் தினகரன் கல்வி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்களுக்காக தினகரன் நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான தினகரன் கல்வி கண்காட்சியை, தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி இணைந்து ஏற்பாடு செய்தன.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கண்காட்சியின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் முன்னிலையில், உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், சென்னை விஐடி சார்பு துணை வேந்தர் தியாகராஜன், ஆர்இஎம்ஓ கல்லூரி இயக்குநர் ரித்திக் பாலாஜி, ராஜ லட்சுமி தொழில் நுட்ப கல்லூரி முதன்மை தொடர்பு அலுவலர் விவேக், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், அரங்குகள் அமைத்திருந்தன.
கண்காட்சியை பார்வையிட காலை 9 மணி முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்தனர். இந்த கண்காட்சியில் பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், அனிமேஷன், அயல்நாட்டு கல்வி, கலை அறிவியல், நர்சிங், ஊடகம், ஓட்டல் மேலாண்மை, கட்டிட கலை, புகைப்பட கல்வி, வர்த்தக கல்வி, கடல்சார் கல்வி, அழகு கலை, தீ மற்றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியம், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சார்பில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பணியமர்த்தப்பட்டு மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்தனர். மாணவ, மாணவிகளும் தங்களுக்கு தேவையான சந்தேகங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தனர். மேலும், கண்காட்சியில் தொழில் நெறி வழிகாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீட் தேர்வு தொடர்பான விழிப்புணர்வு, போட்டோ கிராபி, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள், தங்கள் பள்ளி நண்பர்களுடன் வந்து கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர். நேரம் செல்ல செல்ல மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. எல்லா அரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்வி மட்டுமின்றி, மாணவர்கள் வங்கியில் லோன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல், எந்தெந்த படிப்புகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் எந்த வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் மாணவர்களிடம் பேராசிரியர்கள் எடுத்து கூறினர்.
அதனை தொடர்ந்து அமைசர் கோவி. செழியன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வி முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம், என்னென்ன பாடப்பிரிவுகள் படிக்கலாம் என்ற முழு விவரங்கள் அனைத்தும் மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தினகரன் மற்றும் சென்னை விஐடி இணைந்து வழங்குகிற மாபெரும் கல்வி கண்காட்சியை குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி இருக்கிறோம்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய உயர்ந்த கல்வி நிறுவனங்கள் டீமிடெட் யூனிவர்சிட்டி அட்டாணமஸ் காலேஜஸ் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்கள் உடைய உயர் நிலை கல்வியை கண்காட்சியாக்கி அந்த கல்வி நிறுவனத்தினுடைய பெருமையையும் பணிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், நடுநிலையாளர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தொடங்கி இருக்கிறோம். தமிழ்நாடு, உயர்கல்விகள் எந்தளவிற்கு உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்தியா உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கல்வியாளர்கள்கூட தமிழகத்தினுடைய கல்வி வளர்ச்சியை பார்த்து அதிசயிக்கக்கூடிய சூழலில் உயர்ந்த நிலையில் இருக்கிறோம்.
இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற மாநிலங்களில் உயர்கல்வி தமிழ்நாடு முதல் இடத்தில் முந்தி செல்கிற சூழல் உருவாக்கி இருக்கிறோம். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி தந்த தமிழக அரசினுடைய நிலைப்பாட்டை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று சொன்ன அந்த வார்த்தையினுடைய உண்மை பொருளை இன்னைக்கு தமிழக அரசும், அனைத்து கல்லூரி பல்கலைக்கழகமும் நிரூபித்து கொண்டிருக்கிறது. இதை விழிப்புணர்வு கூடிய வகையில்தான் தினகரன் நாளிதழும் சென்னை விஐடியும் இணைந்து ஒரு மாபெரும் கல்வி கண்காட்சியை தொடங்கி இருக்கிறோம்.
இங்கு வரும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், நடுநிலையாளர்கள், ஆங்காங்காக இருக்கக்கூடிய பாடப்பிரிவுகள் என்ன, பயில்வதற்கான வழிமுறைகள் என்ன என்பன போன்றவை உயர்ந்த இடத்தில் எடுத்து செல்வதற்காக பயன்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அளவில் போட்டி போடுகிற தமிழ்நாடு உலகளவில் போட்டி போட வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணம். அதைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வியும் மருத்துவமும் எனக்கு இரு கண்கள் என சொல்லி உயர்ந்த நிலைக்கு வருவதற்கு எல்லா நிலையிலும் உறுதுணையாக இருக்கிறார். எனவே முதல்வரின் எண்ணத்தை ஈடேற்ற கூடிய வகையில் இந்த கல்வி கண்காட்சி துணையிருக்கும். அதற்கு சேவை புரியும் இந்த மன நிறைவோடு அனைவருக்கும் வாழ்த்துக்களை நன்றிகளை பாராட்டுகளை சொல்லி தொடங்கி வைக்கிறேன்.
கடந்த காலங்களில் இருந்த உயர்கல்வியினுடைய வளர்ச்சி விகிதாசாரம் இன்றைக்கு தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அதிகரித்து இருக்கிறது. இதை வெளிநாடுகளுக்கு சென்றுதான் கற்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது, அந்த உயர்கல்வியை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்க முடியும். அதனால் ஏழை, எளிய மாணவர்கள்கூட உயர் கல்வி பெற முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு.
அது பாராட்டுக்குரியது. வசதி மிக்கவர்கள்தான் அந்த பாடப்பிரிவு படிக்க முடியும் என்பதை மாற்றி சாதாரண நடுநலை மக்கள்கூட அந்த பாடப்பிரிவு படிக்க முடியும் என்பதை எனக்கு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உருவாக்கி இருப்பது நாம் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சொல்கிறோம் என்பதற்கான சான்று. இன்னும் பல பாடப்பிரிவுகள், புதுப்புது பாடப்பிரிவுகள், புது புது கல்லூரிகள் என உயர்ந்து நிற்கிற உயர் கல்வி இன்னும் உச்சத்தை தூண்டுவதற்கு தமிழக அரசு துணை நிறகும். அதற்கான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சராகவும் அவர்களோடு கலந்து பேசி வெளியிட இருக்கிறோம்.
இந்தியாவில் இருக்கிற மாநிலங்களில் கல்வி கற்கின்ற மாணவர்கள், ஏதோ கல்லூரிகள் சேர்ந்தோம், படித்தோம், பட்டம் பெற்றோம், வீட்டிற்கு சென்றோம், வேலையில்லாமல் அலைகிறோம் என்று இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் உதித்த ஒரு அற்புத திட்டம்தான் அவருடைய பிறந்த நாளில் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை முதல்வர் துவக்கினார். அந்த திட்டத்தால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கும் போதே ஒரு சுய கல்வியை ஏற்க வேண்டும். கல்வி முடித்து வெளியே செல்லும்போது, அரசு வேலை இல்லையென்றால் தானாகவே சுயமாக ஒரு தொழிலை தொடங்கி கொள்வதற்கான அனைத்து திறனையும் அவன் படித்து முடிக்கும் தருவாயிலே பெற்றுவிட வேண்டும்.
இதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இந்த நான் முதல்வன் திட்டம். புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் எல்லா நிலைகளிலும் உயர்ந்திருக்கிறார்கள். விகிதாச்சாரத்தல் ஆண்களை விட பெண்கள் அதிகமாக கல்வி கற்கிறார்கள். இது பெற்றோருக்கு கூடுதல் சிறப்பு. அதற்கு முதலமைச்சர் கொண்டு வந்திருக்க புதுமைப்பெண் திட்டம்தான். இதன் மூலம் படிப்பை தொடர இயலாத ஏழை மாணவிகள் பயனடைந்துள்ளார். பெண்கள் மட்டுமல்லாமல், மாணவர்களுக்கும் தமிழ்புதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்றைக்கு 3 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். முதல்வரின் ஊக்கத்தால் தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு மாணவர்கள் அதிகளவில் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தினகரன் , சென்னை விஐடி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கண்காட்சி நந்தம்பாக்கத்தில் தொடங்கியது appeared first on Dinakaran.