துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரிய மனு தள்ளுபடி

சென்னை: போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட தனது கணவர் பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி அவரது மனைவி மகாலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், காயம் முழுமையாக குணமடையாததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதியளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையின்போது சரவணனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அந்த மனு முடித்து வைக்கப்பட்டது. தண்டனை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: