2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: ஏப்.30ம் தேதி வரை நடைபெறுகிறது நீர்வளத்துறை மானியக்கோரிக்கை இன்று தாக்கல்

சென்னை: இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக அரசின் 2025-26ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கடந்த 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மறுநாள் (15ம் தேதி) வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து கடந்த 17ம் தேதி முதல் நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் நடந்தது. விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசினர்.

இந்த விவாதம் தொடர்ந்து 20ம் தேதி வரை நடந்தது. 21ம் தேதி பொதுவிவாதத்திற்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்து பேசினர். தொடர்ந்து சனி, ஞாயிறு என்பதால் கடந்த 2 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் தொடங்குகிறது.

முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் பேசுவர். தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 25ம் தேதி (நாளை) நகராட்சி நிர்வாகம் மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது.

26ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, 27ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, 28ம் தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள். வனம், கைத்தறி மற்றும் துணி நூல். ஏப்ரல் 1ம்தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை), 2ம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 3ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, 4ம் தேதி நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை.

7ம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, 8ம் தேதி கூட்டுறவு, உணவு, 9ம் தேதி குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, 15ம் தேதி செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத்துறை. 16ம் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 17ம் தேதி சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை.

21ம் தேதி எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை, 22ம் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, 23ம் தேதி வணிக வரிகள், பத்திரப்பதிவு, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், போக்குவரத்து. 24ம் தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, 25ம் தேதி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, 26ம் தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.

28ம் தேதி பொதுத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், 29ம்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், 30ம் தேதி காவல், தீயணைப்பு துறை மீதான விவாதம் தொடர்ச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதில் அளித்து பேசுவார். நாளை தொடங்கும் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 30ம் வரை நடக்கிறது.

மொத்தம் 24 நாட்கள் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை கூட்டம் கிடையாது. 31ம் தேதி (ரம்ஜான்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டு, சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவை கூடுவதை முன்னிட்டு தலைமை செயலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: ஏப்.30ம் தேதி வரை நடைபெறுகிறது நீர்வளத்துறை மானியக்கோரிக்கை இன்று தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: