நீதித்துறையை அவமதித்து பேசிய விவகாரம்; சீமான் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது எப்படி?.. ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீதான வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யு டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்புச் சட்ட விரோத பேச்சாக இருந்தது. எனவே, எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

The post நீதித்துறையை அவமதித்து பேசிய விவகாரம்; சீமான் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது எப்படி?.. ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: