சென்னையில் தயாராகும் முதல் ஹைட்ரஜன் ரயில்: 80 சதவீதம் பணிகள் நிறைவு

சென்னை : ஹைட்ரஜன் ரயில் சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயிலை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு அடைந்துள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தலா 10 பெட்டிகள் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயிலை தயாரிக்க ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ரூ.2300 கோடி ஒதுக்கியது.

இந்தியாவில் மொத்தம் 19 ரயில்வே மண்டலங்கள் உள்ளது. இங்கிருந்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் அம்ரித் பாரத், வந்தே பாரத் ஆகிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலக நாடுகளுக்கு இணையாக ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் ரயிலை உற்பத்தி செய்ய ஒன்றிய ரயில்வே வாரியம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஹைட்ரஜன் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 35 ஹைட்ரஜன் ரயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஹைட்ரஜன் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பெயிண்ட் அடிப்பது, ஹைட்ரஜன் சிலிண்டர்கள் இணைப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடைய உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில்தான் அடுத்த மாதம் சோதனை ஓட்டமும் நடைபெறுகிறது. ரயிலில் 1,200 எச்.பி. திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த ரயில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post சென்னையில் தயாராகும் முதல் ஹைட்ரஜன் ரயில்: 80 சதவீதம் பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: