நெய்வேலி, மார்ச் 15: என்எல்சி தலைமை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சோதனை செய்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் என்எல்சி அதிபர் மற்றும் இயக்குனர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று என்எல்சி தலைமை அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதனை என்எல்சி அதிகாரிகள் பார்த்தபோது தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளோம் என குறிப்பிட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த என்எல்சி அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி போலீசார் என்எல்சி தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் காவல்துறையினருக்கு ஒத்துழைப்புவழங்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வொரு பகுதியாக சோதனை செய்தனர். இறுதியாக என்எல்சி தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என தெரியவந்தது. மேலும் நிர்வாக அலுவலகம், பீல்ட் ஆபீஸ், அனல் மின் நிலையம் போன்ற இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். பின்னர் இதுகுறித்து நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது. இதனால் என்எல்சி அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் என்எல்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சோதனை appeared first on Dinakaran.
