சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்து தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து 10 பெண்கள் படுகாயம்: சுங்குவார்சத்திரம் அருகே பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அருகே சாலை தடுப்புச்சுவரில் தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 10 பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, தொழிற்சாலை பேருந்து ஒன்று சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை வழியாக சுங்குவார்சத்திரம் நோக்கி நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிள்ளைசத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலையில் இருந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு பேருந்தை இயக்கியபோது, திடீரென்று சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தின் 2 முன் சக்கரங்களும் தனியாக கழன்றது. இதனைகண்ட, சக வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களை மீட்டு சந்தவேலூர் பகுதியில் உள்ள அரசு அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்து தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து 10 பெண்கள் படுகாயம்: சுங்குவார்சத்திரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: