ஈரோடு பிரசார பொதுக் கூட்டம்; வெடிகுண்டு வீசுவேன்: சீமான் சர்ச்சை பேச்சு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஈரோடு: பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தும் வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பேசினார். எவ்வித அடிப்படை ஆதாரமற்ற வகையில் பேசிய இவ்விவகாரம், திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சீமான் மீது காவல் நிலையங்களில் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, நாதக சார்பில், ஈரோடு அசோகபுரம் நெரிக்கல்மேட்டில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

இதில் சீமான் பேசுகையில், ‘உன் பெரியாரிடம் வெங்காயம்தான் உள்ளது. என்னிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை வீசு, நான் வெடிகுண்டை வீசுகிறேன். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் வீசவில்லை. நான் வெடிகுண்டு வீசினால், உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது’ என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து, சீமான் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது பெரியாரிய அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஈரோடு நெரிக்கல்மேட்டில் பிரசார பொதுக்கூட்டம் நடத்த நேற்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நாதகவினர் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மாலை 6.15 மணிக்கு பொதுக்கூட்டத்தை தொடங்கி இரவு 9.15 மணி வரை நடத்தினர். இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சீமான் மற்றும் கட்சியினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post ஈரோடு பிரசார பொதுக் கூட்டம்; வெடிகுண்டு வீசுவேன்: சீமான் சர்ச்சை பேச்சு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: