மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் அடையாறு சந்திப்பில் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள உள்ளதால், அப்பகுதிகளில், வரும் 26, 27ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு பஸ் டிப்போ சந்திப்பில் காந்தி நகர் 2வது குறுக்குத் தெரு வழியாக ராமசந்திரா ஆதித்தனார் சாலையில் வலது புறம் திரும்பி தேஸ்முக் துர்காபாய் சாலை அடைந்து இடது புறமாக திரும்பி திரு.வி.க பாலம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ஒரு வழிச்சாலையாக இருந்த அடையாறு மேம்பாலம் இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

திரு.வி.க பாலத்திலிருந்து அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், ஓஎம்ஆர் மற்றும் மத்திய கைலாஷ் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை. வழக்கம் போல் செல்லலாம். எஸ்.வி.பட்டேல் சாலையிலிருந்து எல்.பி சாலை வழியாக அடையாறு, திருவான்மியூர் மற்றும் பெசன்ட் நகர் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை. வழக்கம் போல் செல்லலாம்.

எல்.பி சாலை வழியாக கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் மற்றும் கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை. வழக்கம் போல் செல்லலாம். பெசன்ட் நகரிலிருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை. வழக்கம் போல் செல்லலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: