அரசு பணிக்கு போலி ஆணை இன்ஸ்பெக்டர் ரூ.1.47 கோடி மோசடி: காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்

சாத்தான்குளம்: அரசு வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி 27 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி ெசய்ததாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதமாக பணியில் உள்ளார். இவர், கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது வேலை வாங்கி தருவதாகவும், போலி பணி நியமன ஆணைகளை கொடுத்தும் 27 பேரிடம் ரூ.1 கோடியே 47 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து ஏசு ராஜசேகரன் மற்றும் அவரது மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்ட கனகதுர்கா ஆகியோர் மீது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த லலிதா (43) நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், எனது மகன் விஷாலுக்கு அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் பணியை பெற்றுத்தருவதாகவும், 50 பேருக்கு இளநிலை உதவியாளர் வேலையும், 10 பேருக்கு ஆசிரியர் வேலையும் உள்ளதாகவும் தெரிவித்தார். இதை நம்பி 3 பேருக்கு அரசு வேலை வாங்க ரூ.8 லட்சம் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.

எங்களுக்கு பணி நியமன ஆணை வந்தது. இதை நம்பி 27 ஏழை, எளிய மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என நினைத்து ரூ.1.47 கோடியை இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் வங்கி கணக்கிற்கும் அனுப்பி வைத்தேன். 27 பேருக்கும் பணி ஆணை கிடைத்தது. அதன் பிறகு மேலும் ரூ.14 லட்சம் கொடுத்து விட்டு வேலையில் சேர்வதாக கூறிசென்றோம். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பணி ஆணையை அரசு அதிகாரியிடம் கொடுத்து கேட்ட போது அது போலியானது என தெரியவந்தது.

அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மருத்துவ விடுப்பில் சென்ற இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திடம் ஆஜரானதாகவும், இந்த மோசடி புகாருக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என எழுதிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. புகார் எதிரொலியாக இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

The post அரசு பணிக்கு போலி ஆணை இன்ஸ்பெக்டர் ரூ.1.47 கோடி மோசடி: காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: