வேதம் விட்ட கண்ணீர்

பல வருடங்களுக்கு முன்பு… ஒரு ஞாயிற்றுக்கிழமை, திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரைத் தரிசித்துவிட்டு, திருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்த தபோவனத்துக்குச் சென்றேன். தபோவனத்தை அடைந்த போது, காலை 10:30 மணி. அன்று ஏகக் கூட்டம்.தியான மண்டபத்தில், சாட்சாத் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி போன்று வீற்றிருந்தார், ஸ்ரீ ஞானானந்த குரு. ஒவ்வொருவராகத் தரிசித்து, பிரசாதம் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். பக்தர்களது கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தது அந்த கருணைக் கடல்!

நான், ஒரு தூண் ஓரத்தில் பயபக்தியுடன் கைகூப்பி நின்றிருந்தேன். அருகில், பரம தேஜஸ்வியான நடுத்தர வயதுடைய வைதீகர் ஒருவரும் நின்றிருந்தார். அவரது திருவாக்கினின்று வெளிவந்த ஸ்ரீ ருத்ரம், கணீரென்று மண்டபம் முழுவதும் வியாபித்தது. அவரை உற்று நோக்கினேன். முகத்தில் வாட்டம்; கண்கள் பனித்திருந்தன.இதற்குள், எங்கள் இருவரையும் பார்த்து விட்ட ஸ்வாமிகள் வைதீகரை மட்டும் சைகை காட்டி அழைத்தார். அருகே சென்ற வைதீகர், சாஷ்டாங்கமாக ஸ்வாமிகளை நமஸ்கரித்து கைகட்டி நின்றார். அவரைக் கனிவுடன் ஏறிட்ட குருநாதர் “வேதம் எப்பவுமே கண்ணீர் விடப்படாது. தேசத்துக்கு சுபிட்சம் குறைஞ்சுடும். என்ன… புரியறதா?” என்றார்.

பிறகு, “நம்ம வாக்குலேருந்து வந்த ஸ்ரீருத்ரம் தேவாமிர்தமா ஸ்வர சுத்தமா இருந்தது. நாம ஒரு காரியம் பண்ணுவோமே. அங்கே ஆஞ்சநேய ஸ்வாமி சந்நிதியில ஒக்காந்துண்டு ஸ்ரீருத்தரத்தை சொல்லிட்டு வரலாமே?!” என்றார் ஸ்வாமிகள்.“பரம பாக்கியம் ஸ்வாமி! அப்படியே பண்றேன்!” என்ற வைதீகர், அனுமன் சந்நிதியை நோக்கி நகர்ந்தார். அடுத்து அடியேனை அழைத்த குருநாதர், “நாம் எப்ப வந்தோம்? அந்த வேதத்தோடு வந்துருக்கமா?” என்று கேட்டார்.

“இல்லே குருதேவா! தனியாகத்தான்” என்று அடியேன் சொன்னதும் ஸ்வாமிகள் சிரித்தப்டி, “சரி… சரி… நாமளும் ஸ்ரீருத்ரம் தெரிஞ்சா சந்நிதியில் சொல்லிட்டு வரலாமே, ரொம்பவும் புண்ணியம்” என்றார்.“உத்தரவுப்படியே செய்றேன்!” என்று கூறி நகர்ந்தேன்.மதியம் 2.00 மணி… தனது பிட்சையை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் மண்டபத்தில் வந்து அமர்ந்திருந்தார், ஸ்வாமிகள். போஜனத்தை முடித்துக்கொண்டு அடியேனும் அந்த வைதீகரும் அங்கே வந்தோம். கூட்டம் அதிகமில்லை. வைதீகரைத் தனக்கு முன்
அமரச் சொன்னார் குருநாதர். நானும் ஓரமாக அமர்ந்தேன்.

சிறிது நேரம் வைதீகரையே பார்த்துக்கொண்டிருந்த ஸ்வாமிகள், “வயிறார சாப்பிட்டமா? பதார்த்தமெல்லாம் ருசியா இருந்துதா?” எனக் கேட்டார்.வைதீகர், “ரொம்ப நன்னா இருந்தது ஸ்வாமி!” என்றதும் குருநாதர் முகத்தில் திருப்தி. பின் கனிவுடன் விசாரித்தார்: “நாம் எந்தூர்லேருந்து வரோம்? பூர்வீகம் என்னவோ?”“பூர்வீகம் உத்தரகோசமங்கை. எங்க கொள்ளுத் தாத்தா காலத்துலேயே தஞ்சாவூருக்கு வந்து செட்டில் ஆயிட்டதா சொல்லுவா” என்றார் வைதீகர்.

“நம்ம நாமதேயம்?” ஸ்வாமிகள் கேட்டார்.“அடியேன் சீதாராம கனபாடிகள். தகப்பனார் ரங்கரராம கனபாடிகள். தாத்தா, ஆத்மநாத சிரௌதிகள். இப்போ, அவா யாரும் இல்லே. அம்மாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போய்ட்டார்” என்றார் வைதீகர்.

“வேதத்துல நாம என்ன சாகை?”
“யாஜுஷம் (யஜுர் வேதம்) ஸ்வாமி!”
“கனாந்தம் (வேதத்தில் ‘கனம்’ முடிய) அத்யயனம் ஆகியிருக்காக்கும்?”
“ஆமாம் குருநாதா!”
“நமக்கு என்ன வயசு?”
“நாற்பத்திநாலாறது ஸ்வாமி!”
“சந்ததி?”

இருபது வயசுல விவாகத்துக்கு ஒரு பொண்ணு இருக்கா! ஆனா விவாகம் பண்ண முடியலே…”
“ஏன்”“கையில பணம்-காசு இல்லே குருநாதா. அந்த கஷ்டம்தான் என்னை ரொம்பவே வாட்டறது” என்ற சீதாராம கனபாடிகள் கேவிக்கேவி அழுதார்.
உடனே குருநாதர், “அடடா… நாம எதுக்கும் கவலைப்பட வேணாம். எல்லாத்தையும் அந்த பாண்டுரங்கன் பார்த்துப்பான், என்ன?” என்று ஆறுதல்படுத்தினார்.
பிறகு, “ஆமாம், நம்ம குடும்பத்துக்குன்னு நிலபுலம் எதுவும் கிடையாதோ?” ஸ்வாமிகள் கேட்டார்.

“எனக்குத் தெரிஞ்சு அப்படியெல்லாம் இருந்ததா தெரியலே குருநாதா. ஆனா, தாத்தா காலத்துல திருக்காட்டுப்பள்ளிலேர்ந்து வண்டி வண்டியா நெல் வந்துண்டிருந்ததுனு அம்மா சொல்லுவா” என்றார் சீதாராம கனபாடிகள்.

“நாம எங்கே வேதாத்யயனம் பண்ணினோம்?”
“காசி க்ஷேத்ரத்துல ஒரு யஜுர் வேத பாட சாலைல குருநாதா. அப்பவே எனக்கு வைராக்கியமா ஒண்ணு தோணித்து. பூரணமா அத்யயனம் பண்ணி முடிச்சதும், பூர்வம், அபரம்னு (சுப, அசுப காரியங்கள்) பண்ணி வைக்கப் போகாமல்… நாம கத்துண்ட வேதத்தை நெறய பேருக்கு சொல்லித் தரணும்னு தீர்மானிச்சேன். காசியை விட்டுக் கிளம்பினதும் இந்த வைராக்கியம் மாறிடுத்துன்னா என்ன பண்றதுனு யோசிச்சு, கங்கையிலேயே… ‘பூர்வாபரம் பண்ணி வைக்கப்போக மாட்டேன்’னு சத்ய சங்கல்பம் பண்ணிண்டு ஸ்நானம் பண்ணிட்டேன். ஊருக்கு வந்ததும் இதைக் கேட்டு எல்லாரும் என்னைக் கோவிச்சுண்டா. நான் கவலைப்படலே! ஆர்வத்தோடு வந்த பசங்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.

ஊர்ஊரா பாராயணத்துக்குப் போவேன். அப்பறமா, விவாகமாகி பொண்ணும் பொறந்துட்டா. ரொம்ப கஷ்ட ஜீவனம். பல நாள் நீராகாரத்தை மட்டும் குடிச்சுட்டு, குடும்பம் பட்டினி கெடந்திருக்கு!கங்கையில பண்ணிண்ட சத்ய சங்கல்பத்த மீறிடலாம்னுகூட சில நேரங்கள்ல தோணும்! உடனேயே, ‘சேச்சே… கங்கையில் பண்ணிண்ட சத்ய சங்கல்பம் சாட்சாத் பார்வதி பரமேஸ்வராள்ட்ட பண்ணிண்ட அதை மீறலாமோ?’னு மனசை சமாதானப் படுத்திப்பேன். வைராக்கியமா இத்தனை வருஷம் ஓட்டிட்டேன். இப்போ பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணியாகணும்! எப்படின்னு தெரியலே…” கண் கலங்கினார் கனபாடிகள்.

ஸ்வாமிகள் நெகிழ்ந்து போனார். சிறிது நேரம், கனபாடிகளையே பார்த்துக் கொண்டிருந்தவர், “கனபாடிகளே! கவலையே வேண்டாம். எல்லாம் நல்லபடியாவே நடக்கும்” என ஆசிர்வதித்து விட்டு, “அது சரி… தபோவனத்துக்குப் போய்ட்டு வரும் படியா யார் சொல்லி அனுப்பினா?” என சிரித்தபடி கேட்டார்.“தஞ்சாவூர்ல வேங்கடசுப்பய்யர்னு ஸ்கூல் வாத்தியார் ஒருத்தர். அவர்தான், ‘ஞானானந்த தபோவனம் போய், சத்குருநாதனைப் பாருங்கோ… நிச்சயம் வழி பொறக்கும்’னார். குருநாதனே சரணா கதினு வந்துட்டேன்… காப்பாத்தணும்!” என்று சாஷ்டாங்கமாக ஸ்வாமிகளின் காலில் விழுந்தார் கனபாடிகள்.

அர்த்த புஷ்டியோடு சிரித்த ஸ்வாமிகள், “நாம இன்னிக்கு தபோவனத்துல தங்கிட்டு, நாளைக்கு ஸ்வாமி உத்தரவு கொடுத்ததும் புறப்படலாம்” என்றார். பிறகு அடியே னிடம், “நமக்கு மெட்ராஸ்ல ஒண்ணும் அவசர ஜோலி இல்லையே! நாமும் நாளைக்குப் போகலாம்” என்று கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.மறுநாள் காலை 11:00 மணி. தியான மண்டபத்துக்குள் பிரவேசித்தார் குருநாதர். அப்போது கூட்டமில்லை. அனுஷ்டானங்களை பூர்த்தி செய்துவிட்டு, சீதாராம கனபாடிகளும் அங்கு வந்து சேர்ந்தார். அனைவரும் குருநாதரை நமஸ்கரித்து அமர்ந்தோம்.

அந்த நேரத்தில், வாசலில் இரண்டு பெரிய கார்கள் வந்து நின்றன. அவற்றிலிருந்து இறங்கிய நான்கைந்து பேர் உள்ளே வந்து, ஸ்வாமிகளை நமஸ்கரித்தனர். புன் முறுவல் பூத்தார் குருநாதர். அவர்களில் ஒருவர், உடன் வந்தவர்களிடம் ஏதோ ஜாடை காட்டினார். அவ்வளவுதான்! ஆறு பெரிய சாக்கு மூட்டைகள் கார்களிலிருந்து இறக்கப்பட்டு, குருநாதருக்கு முன் வைக்கப்பட்டன. அவற்றை உற்று நோக்கிய ஸ்வாமிகள், “இதெல்லாம் என்ன?” என்று கேட்டார்.

வந்தவர்களில் ஒருவர், “அரிசி ஸ்வாமி… நல்ல கிச்சடி சம்பா பச்சரிசி!” என்றார்.“இதெல்லாம் எங்கே வௌஞ்சுது?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.“என்னோட வயல்லதான் ஸ்வாமி” என்று பெருமிதம் பொங்க கூறினார் அந்த ஆசாமி!“நம்மள இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே! நம்மோட நாமதேயம்?” ஸ்வாமிகள் கேட்டார்.“கிருஷ்ணமூர்த்தி! ஆஸ்ரமத்துல தினமும் அன்ன தானம் நடக்கறதுனு கேள்விப்பட்டேன். அதுக்கு என் கைங்கரியமா இருக்கட்டு மேனுதான்…”அவர் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார்: இருக்கட்டும்… எல்லா மூட்டையும் ஈர அரிசியா இருக்கும் போலிருக்கே?”“இல்லை ஸ்வாமி! நாலு நாள் நன்னா காய வெச்சு சுத்தம் பண்ணி எடுத்து வந்திருக்கேன்” என்று பதற்றத்துடன் கூறினார், கிருஷ்ணமூர்த்தி.

இதைக் கேட்டுச் சிரித்த ஸ்வாமிகள், “அப்படியா! மூட்டைகளைப் பிரிச்சுத்தான் பார்ப்போமே” என்று உத்தரவு கொடுத்தார். மூட்டைகள் பிரிக்கப்பட்டன. தன் தங்கக் கையால் ஒருபிடி அரிசியை அள்ளினார் குருநாதர். அவர் சொன்னபடியே அதில் ஈரம் கசிந்தது. எல்லா மூடைகளும் அவ்வாறே இருந்தன!குருநாதர் மிகவும் சாந்தமாக, “கிருஷ்ணமூர்த்தி! இந்த ஈரக்கசிவை சாதாரண ஜலம்னு நெனச்சுட வேண்டாம். இது வேதம் விட்ட கண்ணீர்” என்றார். “நமக்குப் பூர்வீகம் திருக்காட்டுப்பள்ளிதானே?” என்று கேட்டார்.
கிருஷ்ணமூர்த்திக்கு வியப்பு! “ஆமாம் குருநாதா!” என்றார், ஆச்சரியத்துடன்.

அவரிடம் கனபாடிகளைச் சுட்டிக்காட்டிய ஸ்வாமிகள், “இதோ உட்காந்திருக்காரே சீதாராம கனபாடிகள்… இவரோட தாத்தாதான் உங்க கிரஹத்துக்குப் பரம்பரை சாஸ்திரிகளா இருந்திருக்கார். வருஷா வருஷம் பத்து வண்டி நெல், வேதமான்யமா இவா குடும்பத்துக்குப் புறம்பான ஒரு விவாகம் நடைபெற வேண்டிய நிர்ப்பந்தம் உங்க குடும்பத்துக்கு!

அதை நடத்தி வைக்கும்படி இவரோட தாத்தாவை உங்க தாத்தா கேட்க, அவர் மறுத்துட்டார். ‘மான்யத்த நிறுத்திடுவேன்’னு சொல்லி இருக்கார் உங்க தாத்தா. ‘எனக்கு மானம்தான் முக்கியம்; மான்ய மில்லே’னு வந்துட்டார் இவரோட தாத்தா! அன்னிலேருந்து உபாத்யாயமும் நின்னுடுத்து; மான்யமும் நின்னுடுத்து! அந்த வேதம் விட்ட கண்ணீர், சூட்சுமமா… இன்னமும் அந்த குறிப்பிட்ட வயல்ல விளையற அரிசியில இருக்குங்கறது இப்ப புரியறதா?” என்றார்.

அனைவரும் பிரமிப்புடன் அமர்ந்திருந்தோம்!ஸ்வாமிகள் தொடர்ந்து கேட்டார்: “சரி, அந்த நிலத்துக்கு ஏதாவது பேரு உண்டா?”“வேதவிருத்தி” என்றார் கிருஷ்ணமூர்த்தி.உடனே, “இப்ப புரியறதா… அது, வேதத்தைத் தொழிலா வெச்சுண்டிருக்கறவாளுக்கு மான்யமா விடப்பட்ட நிலம்ங்கற விஷயம்?!” என்று சிரித்தார் ஸ்வாமிகள்.கிருஷ்ணமூர்த்தி எழுந்தார். ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தவர், “குருதேவா… இந்த மான்ய நில விஷயம் இதுவரைக்கும் சத்தியமா எனக்குத் தெரியாது.

நீங்க என் கண்ணைத் திறந்துட்டேள். பணத்துக்குக் கஷ்டம் இல்லை. திருச்சியில ஜவுளி பிசினஸ் நன்னா நடக்கறது. மான்யமா விட்டுட்ட அந்த நிலத்துல விளைந்த அரிசியை, இதுவரைக்கும் என் பரம்பரை தான் சாப்பிட்டிருக்கு. இதுக்குப் பிராயச்சித்தமா இந்த சீதாராம கனபாடிகளுக்கு ஒரு காரியம் பண்ணப் போறேன்” என்றபடியே, தன் கைப்பையைத் திறந்து செக் புத்தகத்தை எடுத்தார்.

சீதாராம கனபாடிகளின் இனிஷியலைக் கேட்டு அதைப் பூர்த்தி செய்து, குருநாதரின் திருவடிகளில் சமர்ப்பித்தார். அதை ஏறிட்டுப் பார்க்காமலேயே ஸ்வாமிகள் சொன்னார்:“ஒண்ணரை லட்ச ரூபாய்!”ஆனந்தக் கண்ணீர் உகுத்தார் சீதாராம கனபாடிகள்! அந்த ஆறு அரிசி மூடைகளையும் சீதாராம கனபாடிகள் இல்லத்திலேயே சேர்க்கும்படி கிருஷ்ணமூர்த்தியைப் பணித்துவிட்டு, உள்ளே சென்றார் அந்த பிரத்யட்ச பாண்டுரங்கன்!

ரமணி அண்ணா

 

The post வேதம் விட்ட கண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: