பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே. கன்னிகைப்பேர் கிராமத்தில் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் கிராம தேவதையான ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, விஷேச பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீ நாகாத்தம்மன் பிரதிஷ்டை செய்தல் நடைபெற்றது.

பின்னர், 2ம் கால யாக பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றது. பின்பு, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வந்த கலசங்களை யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜை செய்தபின் கலச புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில், மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்து பின்னர் ஆலய கோபுரத்தின் மீதுள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், குங்குமம், மஞ்சள் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், கலந்துகொண்ட திரளான பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்திய வேலு, மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி குமார், சிவா, வெங்கடேசன், வெங்கடேசன், செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

The post பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் நாகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: