வங்கக்கடலில் அக்டோபர் 23-ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்!

வங்கக்கடலில் அக்டோபர் 23-ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மத்திய அந்தமான் கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்கக் கடலின் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 21-ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 20, 21, 24-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 22, 23, 25-ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கத்தார் பரிந்துரைத்த டாணா (DANA) என பெயரிடப்பட உள்ளது. இதன்படி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், இது ஓடிசா, மேற்குவங்காளம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வங்கக்கடலில் அக்டோபர் 23-ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: