உலகில் 110 கோடி மக்கள் வறுமையில் பசி, பட்டினியுடன் அவதி : இந்தியாவில் மட்டும் 23.4 கோடி பேர் என ஐ.நா. அதிர்ச்சி தகவல்!!

நியூயார்க் : வறுமையால் பாதிக்கப்பட்டோர் இந்தியாவில் தான் அதிகம் பேர் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டில் உலகளாவிய வறுமை குறியீடு குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டது. அதில் உலகில் 110 கோடி மக்கள் மிகவும் மோசமான வறுமையில் பசி, பட்டினியுடன் வாழ்வதாகவும் அதில் அதிகம் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மட்டும் 23.4 கோடி பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தானில் 9.3 கோடி எத்தியோப்பியாவில் 8.6 கோடி மக்களும் நைஜீரியாவில் 7.4 கோடி மக்களும் காங்கோவில் 6.6 கோடி பேரும் வறுமையின் பிடியில் சிக்கி தவிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பசி பட்டினியால் வாடும் 110 கோடி மக்களில் 48% பேர் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 58.4 கோடி பேர் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்றும் உலகின் மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் 28% என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 40 கோடி மக்களும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 75 கோடி மக்களும் வறுமையில் உள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அதே போல் 2ம் உலக போருக்கு பிறகு கடந்த 2023ம் ஆண்டில் தான் பல்வேறு நாடுகளில் அதிக அளவு மோதல்கள் நடைபெற்றதாகவும் இதன் காரணமாக 12 கோடி மக்கள் புலம்பெயர்ந்த நிகழ்வும் நடந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

The post உலகில் 110 கோடி மக்கள் வறுமையில் பசி, பட்டினியுடன் அவதி : இந்தியாவில் மட்டும் 23.4 கோடி பேர் என ஐ.நா. அதிர்ச்சி தகவல்!! appeared first on Dinakaran.

Related Stories: