நத்தம் நான்கு வழிச்சாலை சுரங்க பாதையில் தேங்கும் மழைநீர்: வாகனஓட்டிகள் அவதி

 

நத்தம், அக். 18: நத்தம் அருகே நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் கீழ் சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். நத்தம் அருகே மதுரை – துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையில் சேர்வீடு, துவராபதி, கைப்பையாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரிவில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை நத்தம் பகுதிக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் பெய்த மழை காரணமாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுரங்க பாதை வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக டூவீலரில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரது நலன் கருதி இந்த சுரங்க பாதையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நத்தம் நான்கு வழிச்சாலை சுரங்க பாதையில் தேங்கும் மழைநீர்: வாகனஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: