கச்சிராயபாளையம் அருகே பயங்கரம் தலையணையால் அழுத்தி கணவன் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது

சின்னசேலம், அக். 18: கச்சிராயபாளையம் அருகே வாலிபர் மர்மசாவு என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே, கணவனை கொலை செய்தது அம்பலமானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாத்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனவேல்(40). திருமணமானவர். மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் குடிக்கும் போதெல்லாம் சாப்பிடாமல் படுத்துக்கொள்வார். அதைப்போல கடந்த 5ம் தேதி இரவு 9.30 மணியளவில் குடித்துவிட்டு தன் வீட்டில் படுத்துக்கொண்டவரை மறுநாள் காலை அவரது மனைவி அருள்மொழி(33) எழுப்பியபோது இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இறந்துபோன தனவேலின் தம்பி கருப்பன்(39) புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரேதபரிசோதனையில் தனவேல் மூச்சுத்திணறி இறந்துபோனது தெரியவந்தது. இதையடுத்து கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் அவரது மனைவி அருள்மொழியிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளையும் ஆராய்ந்தனர்.

அப்போது அந்த தெருவில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு நடமாடியது தெரிந்தது. இதையடுத்து அருள்மொழியிடம் நடத்திய தீவிர விசாரணையில் அருள்மொழியும், கச்சிராயபாளையத்தை சேர்ந்த அவரது கள்ளக்காதலன் ஆட்டோ டிரைவர் சரவணன் என்பவரும் சேர்ந்து தனவேல் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கச்சிராயபாளையம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கச்சிராயபாளையம் அருகே தாலி கட்டிய கணவனை அவரது மனைவியும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கச்சிராயபாளையம் அருகே பயங்கரம் தலையணையால் அழுத்தி கணவன் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.

Related Stories: