லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: மேயர் உள்பட 27 பேர் பலி

பெய்ரூட்: கடந்த 24 மணி நேரத்தில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மேயர் உள்பட 27 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இந்த போர் ஓராண்டை கடந்து நடந்து வரும் நிலையில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், அடுத்தடுத்து பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் தெற்கு பகுதியை சேர்ந்த நகர மேயர் ஒருவரும் அடங்குவார். நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான கூட்டம் ஒன்றை நடத்துவதற்காக மேயர் வந்தபோது, தாக்குதலில் பலியாகி உள்ளார். இந்த தாக்குதலில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தன. எனினும், இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, ‘தெற்கு பகுதி நகரான குவானாவில், ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஜலால் முஸ்தபா ஹரிரி என்பவரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 15 பேர் உயிரிழந்தனர்’ என தெரிவித்துள்ளது. இதற்கு முன் 1996ம் ஆண்டு குவானா நகரில், ஐ.நா. வளாகத்தில் அடைக்கலம் புகுந்திருந்த நூற்றுக்கணக்கானோரை இஸ்ரேல் தாக்குதல் நடத்தி கொன்றது.

பலர் காயமடைந்தனர். அவர்களில் ஐ.நா. அமைதி காப்பாளர்கள் 4 பேரும் அடங்குவார்கள். தெற்கு லெபனான் மீது இஸ்ரேலின் 138 வான்வழி தாக்குதல்கள் பதிவாகி உள்ளன. இதேபோன்று, 6 நாள் போர் நிறுத்தத்திற்கு பின்னர், பெய்ரூட் நகரின் தெற்கே அமைந்த புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில், மேயர் அகமது கஹில் கொல்லப்பட்டுள்ளார் என மாகாண கவர்னர் ஹுவைடா துர்க் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதனால், கடந்த அக்டோபரில் இருந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு மக்களில் 2,377 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தவிர, 4 லட்சம் குழந்தைகள் உள்பட 12 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர்.

The post லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: மேயர் உள்பட 27 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: