சாலைகளில் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்றி சாதனை தூய்மை பணியாளர்களை பாராட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: சிற்றுண்டி, உதவிப் பொருட்கள் வழங்கினார்

சென்னை: சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையில் தொடர்ந்து இடைவிடாது பணியாற்றி வரும் பெருநகர சென்னை மாநகராட்சி 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பிரட், போர்வை உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடந்த சமையல் தயாரிக்கும் பணியையும், மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை லேசான மழைதான் பெய்துள்ளது. இதைவிட அதிக மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுடன் மக்களாக பணியாற்றினர். மக்களுக்கு என்ன தேவையோ, எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. பொதுமக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, மண்டல குழு தலைவர் மதன்மோகன், மண்டல கண்காணிப்பு அலுவலர் பிரதாப், துணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

* எடப்பாடிக்கு பதிலடி…
மழைநீர் தேங்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளதாக கூறினீர்கள். தற்போது பெய்த மழைக்கு தண்ணீர் தேங்காமல் இருக்கிறது. அதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு நாங்கள் தரும் வெள்ளை அறிக்கை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

The post சாலைகளில் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்றி சாதனை தூய்மை பணியாளர்களை பாராட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: சிற்றுண்டி, உதவிப் பொருட்கள் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: