பூஜைஅறை, செருப்பு ஸ்டாண்ட், சேலைகளுக்குள் மறைத்து வைப்பு தினமும் லஞ்சப் பணத்தோடு வரும் மனைவி கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்: தெலங்கானா பெண் அதிகாரிக்கு சிக்கல்

திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மணிகொண்டா நகராட்சியில் டி.இ.இ. ஆக பணிபுரிபவர் ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபத். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் மனைவி ஜோதி லஞ்சம் வாங்குவதாக, கணவர் ஸ்ரீபத் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: எனது மனைவி ஜோதி ஒப்பந்ததாரர்களிடம் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சமாக பெற்று வருகிறார். எத்தனை முறை சொல்லியும் லஞ்சம் வாங்குவதை கைவிடவில்லை. மேலும் லஞ்சம் வாங்க வேண்டாம் என கூறியதால் இருவருக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டது. நான் சண்டையிடும் போதெல்லாம் அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் வாங்க அழுத்தம் கொடுப்பதாகவும், அதனை தாங்க முடியாமல் லஞ்சம் வாங்குவதாகவும் கூறினார்.

லஞ்சம் வாங்குவது குற்றம், பாவம் என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தாலும் மனைவி ஜோதி அதை பொருட்படுத்துவதில்லை. 7 ஆண்டுகளாக லஞ்சம் வாங்குவது தொடர்பாக அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்காமல் ஒரு நாள் கூட மனைவி வீட்டுக்கு வந்ததில்லை. கமிஷன் வடிவில் லஞ்சம் வாங்கி, பணத்தை வீட்டுக்கு கொண்டு வந்து, எனக்கு தெரியாமல் ரகசியமாக மறைத்து விடுகின்றார். மொத்தம் ரூ.80 லட்சத்தை மறைத்து வைத்துள்ளார்.ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிய வந்ததால் 2 நாட்களுக்கு முன்பு ஜோதி ஐதாராபாத் மாநகராட்சிக்கு பணியிடம் மாற்றப்பட்டார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். வீட்டில் உள்ள பீரோ சுவரில், வார்ட்ரோப்களில் புடவைகளுக்கு இடையே, பேப்பர்களுக்கு இடையே, சாமி அறைக்குள், சுவாமி படங்களுக்குப் பின்னால், செருப்பு மற்றும் ஷூக்களை வைக்கும் ஸ்டாண்டில் கூட பணத்தை மனைவி மறைத்து வைத்திருப்பதை வீடியோ எடுத்து அவர் வெளியிட்டுள்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பூஜைஅறை, செருப்பு ஸ்டாண்ட், சேலைகளுக்குள் மறைத்து வைப்பு தினமும் லஞ்சப் பணத்தோடு வரும் மனைவி கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்: தெலங்கானா பெண் அதிகாரிக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: