கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு 2 பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த 2 பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இரண்டு பெண்கள் திடீரென குறைகேட்பு அரங்கத்தின் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனே அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் பகுதியைச் சேர்ந்த விஜயா மற்றும் சுகுணா என்பதும், இவர்களுடைய குடும்பத்தினரை பொது வழியில் செல்ல சிலர் தடுப்பதாகவும், மீறிச்சென்றால் தாக்கப்படுவதாகவும், இது தொடர்பாக காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினர். இதன் பின்னர் போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு 2 பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: